By Village Missionary Movement
Thursday, 17-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 17-06-2021
வறட்டு கெளரவம்
“உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்;…” - மத்தேயு 5:37
ஆந்திர மாநிலத்தில் அற்புதமாய் ஊழியம் செய்த சகோதரர் ஏசன்னா அவர்கள் தம்முடைய வாழ்வில் நடந்த சம்பவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.
“எனக்கு வாழைப்பழம் என்றால் இஷ்டம். இரவு உணவிற்குப் பின் ஒரு வாழைப்பழம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பதுண்டு. ஒரு முறை குறிப்பிட்ட பட்டணத்திற்கு பிரசங்கிக்கும்படி சென்றிருந்தேன். கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவு வழங்கினார்கள். எனக்கு வாழைப்பழம் பிடிக்கும் என்பதை எப்படியோ கேள்விப்பட்டு ஒரு குடும்பத்தினர் எனக்கு வாழைப்பழம் கொண்டு வந்திருந்தனர். நானோ என்னை தவறாக நினைத்துவிடக்கூடாது என்று தயக்கத்துடன் “வேண்டாம், பரவாயில்லை” என்று கூறிவிட்டேன். வாய் சொல்லியதே தவிர மனது வேண்டுமென்று கூறிக்கொண்டிருந்தது. அதற்குள் அக்குடும்பத்தினர் ஐயாவுக்கு வாழைப்பழம் பிடிக்காதோ என்னமோ? வற்புறுத்தக்கூடாது என்று எண்ணி போய்விட்டார்கள். வாழைப்பழம் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன். ஒன்றுக்கும் உதவாத மனித கெளரவத்திற்காக இன்று வாழைப்பழத்தை இழந்துவிட்டேன்.” என்றார். நம் வாழ்வில் இதைப்போல வறட்டு கெளரவத்தினால் தேவன் கொடுக்கும் எந்தவொரு ஆசீர்வாதத்தையும் இழந்து போய்விடக்கூடாது என்று அடுத்த நாளில் பிரசங்கித்தாராம்.
வேதத்திலும் 2 இராஜாக்கள் 5ம் அதிகாரத்தில் நாகமானைக் குறித்து வாசிக்கிறோம். நாகமான் அதிக தூரம் நம்பிக்கையோடு பிரயாணம் செய்து எலிசாவின் வீட்டு வாசல்வரை வந்துவிட்டான். “போய் யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம்பண்ணு” என்று எலிசாவின் வேலைக்காரன் மூலமாய் சொல்லப்பட்டதைக் கேட்டு கடுங்கோபம் கொண்டான் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் தன் வேலைக்காரனின் சொல் கேட்டு யோர்தானில் ஸ்நானம்பண்ணியதால் குஷ்டரோகியான அவன் சரீரம் சிறுபிள்ளையின் சரீரத்தைப் போல மாறிற்று என்று வாசிக்கிறோம்.
இதை வாசிக்கின்ற அன்பு சகோதரனே, சகோதரியே, நாமும் கூட அநேக காரியங்களில், முக்கால்வாசி காரியங்களைச் செய்து விட்டு மனதில் ஆழத்திலுள்ள வறட்டு கெளரவத்தினால் அநேக ஆசீர்வாதங்களை இழந்து விடுகிறோம். உதவி பெறும்படி வாசல் வரை வந்துவிட்டோம், இன்னுமேன் தயக்கம். வறட்டு கெளரவங்களை, நான் என்ற பெருமைகளை விட்டொழிப்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம். மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாறுவோம்.
ஜெபக்குறிப்பு:
பிசாசினால், வியாதியினால் கட்டப்பட்ட மக்களுக்கு Healing Service நடத்தப்பட, இதன்மூலம் அநேகர் அற்புத விடுதலை பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250