By Village Missionary Movement
Monday, 09-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 09.03.2026
ஒரு வாலிபனின் பங்களிப்பு
"...அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார்” - யோவான் 9:31
ஹவார்டு கெல்லி வாலிபனாக இருந்தபோது, தனது படிப்பு செலவிற்காக பகுதி நேரமாக வீடு வீடாக சென்று பொருட்களை விற்று வந்தார். ஒரு நாள் மிகவும் களைப்படைந்தவராய் ஒரு வீட்டின் கதவைத் தட்டி குடிக்கத் தண்ணீர் கேட்டார். ஒரு பெண் தண்ணீருக்குப் பதிலாக ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட ஹவார்டு, இரக்கமுள்ள உங்கள் செயலுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றார். ஆண்டுகள் பல கடந்தாலும் ஹவார்டுக்கு இந்த சம்பவம் நினைவில் இருந்தது. மிகவும் கடின பிரயாசப்பட்டு டாக்டருக்கு படித்து முடித்து ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார். அங்கு ஒரு பெண் கொடிய நோயில் அகப்பட்டிருப்பதாகவும், மருத்துவ செலவு அதிகமாகும் என்பதால் சிகிச்சை எடுக்க மறுப்பதாக கேள்விப்பட்டார். உடனே அந்த பெண்ணைப் பார்க்கச் சென்றார். அந்த பெண்ணைப் பார்த்ததும் தனக்கு தண்ணீருக்குப் பதில் பால் கொடுத்தவர் என்று அறிந்து மருத்துவ செலவை தானே பொறுப்பெடுத்துக் கொள்வதாக கூறி அவருக்கு சிகிச்சையும் அளித்தார். அந்தப் பெண் சிகிச்சை பெற்ற பின் தனக்காக பணம் செலுத்தியவரை பார்க்க விரும்பினாள். அப்பொழுது டாக்டர் ஹவார்டு கெல்லி, ஒரு டம்ளர் பாலுக்கான நன்றி கடன் என்று முகமலர்ச்சியோடு கூறினார். உலக மனிதர்கள் நன்றி கடனை பங்களிப்பாக பதில் அளிக்கிறார்கள். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் இயேசு கிறிஸ்து நமக்களித்துக் கொண்டேயிருக்கும் எண்ணிக்கைக்கு அடங்கா நன்மைக்கு ஈடாக நாம் எதுவும் செய்து ஈடுகட்ட முடியாது. ஆனால் நாம் நமது பங்களிப்பை அளிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
யோவான் 9 ஆம் அதிகாரத்தில், பிறவி குருடனான வாலிபனின் கண்களை இயேசு கிறிஸ்து திறந்து அற்புதம் செய்தார். குருடனாயிருந்து பார்வையை பெற்றுக் கொண்டவன் இயேசுவைப் பற்றி சாட்சி சொல்லவும், இயேசுவுக்காக பாடு அனுபவிக்கவும் தைரியமாயிருந்தான். உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்று கேட்டவர்களிடம் இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். ஆனால் பார்வையடைந்தவனுடைய பெற்றோர்கள் கண்களை திறந்தது யார் என்று தெரியாது என்றார்கள். யூதர்களுக்கு பயந்ததினால் இப்படி சொன்னார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. பார்வையடைந்தவன் தைரியமாக கூறியது, அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். இயேசுவைப் பற்றி சாட்சி கூறியதால், அவனைப் புறம்பே தள்ளி விட்டதாக காண்கிறோம். இயேசு அவனுடைய பங்களிப்பைப் பார்த்து, அவனைத் தேடி வந்து, அவனோடு பேசி, தன்னை வெளிப்படுத்துகிறார். பார்வையடைந்தவன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரை விசுவாசித்து பணிந்து கொண்டான். நாம் நமது பங்களிப்பை எவ்விதம் அவருக்கு அளிக்கிறோம் என்பதை அவர் கவனிக்கிறார் என்று இந்த வேதப் பகுதியிலுள்ள சம்பவம் நமக்கு தெளிவாக விளக்குகிறது. நாம் எவ்வளவு பெரிய பங்களிப்பை அளிக்கிறோமோ அதற்குரிய பலனை இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் பெறுவோம்.
- Rev.D. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
வட மாநிலங்களில் நம்மோடு இணைந்துள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகத்திற்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864