By Village Missionary Movement
Wednesday, 16-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 16-06-2021
பண்ணை வீடு
“…ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.” – யோவான் 14:2
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் போன்ற பெரும் புள்ளிகள் இந்நாட்களில் விரும்பி ஒன்றைக் கட்டுகின்றனர். அதுதான் பண்ணை வீடு என்று சொல்லக்கூடிய Farm house. அதைக் கட்ட வேண்டிய கட்டாய காலமாகிவிட்டது இந்தக் காலம். மிகுந்த கவனத்தோடு அதைக் கட்டுவார்கள், அதிகம் செலவழிப்பார்கள். ஏனென்றால் தானும், குடும்பத்து நபர்களும், நண்பர்களும் அவ்வப்போது சென்று ஓய்வெடுக்க, நேரம் செலவழிக்க அதைத்தான் பயன்படுத்துவார்கள். அது அவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. தனக்கென்று ஒரு பண்ணை வீடு இல்லாமல் கவலைப்படும் அநேகர் இருக்கிறார்கள். குடியிருப்பதற்கென்று வீடு இருக்கும். ஆனாலும் பண்ணை வீட்டைப் பற்றி எப்போதும் யோசிப்பார்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கும்போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்த 33 ½ ஆண்டு கால வாழ்க்கையில் சுமார் 3 ½ ஆண்டுகள் சீஷர்களோடு கழித்தார். அப்போதுதான் அவர், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;… ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2) என்று சொல்லுகிறார். இந்த வார்த்தை மிகவும் முக்கியம். இந்தப் பூமி நமக்கு நிரந்தரமில்லை. பரலோகம் செல்லுவது என்பதற்கு வழியாகவும், சத்தியமாகவும் இருப்பவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே! வேதம் சொல்லுகின்ற இந்த சத்தியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசுவினிடத்தில் கேட்க வேண்டும், மன்றாட வேண்டும்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! உலகத்தில் வாழ்பவர்களுக்கு பண்ணை வீடு மிகவும் முக்கியம். நமக்கு பரலோகம் மிகவும் முக்கியம். இந்தப் பூமியில் நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் நம்முடைய கவலை முழுவதும் பரலோக வீட்டைப்பற்றித் தான் இருக்க வேண்டும். அதைப் பற்றிய கவலையே வேண்டும், அதற்காக அதிகம் உழைத்துப் பிரயாசப்படவும் வேண்டும். அதற்கு இயேசுவே வழியாயிருக்கிறார். அவரை சார்ந்து வாழும் நமக்கு இந்தப் பூமியில் நிலையான வீடு இல்லாவிட்டாலும், நிலையான பரலோகத்தில் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஆகவே நிரந்தர பண்ணை வீடாகிய (Farm house) பரலோகத்தைப் பற்றி கவலை, அக்கறையோடு இருப்போமானால், இவ்வுலக வாழ்வும் நமக்கு ஆனந்தமாயிருக்கும்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகளை மாதந்தோறும் ரூ. 5000 கொடுத்து தாங்குகிற குடும்பங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250