By Village Missionary Movement
Friday, 27-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 27.02.2026
என்னிலிருந்து மாற்றம்
“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;..." - நீதி. 23:7
போதகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் பிரசங்கம் செய்வதற்காக குறிப்புகளை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சிறிய மகன் அவரை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தான். மகனுக்கு ஒரு வேலையை கொடுத்து உட்கார வைத்தால்தான், தம்முடைய காரியத்தை செய்து முடிக்க முடியும் என்று போதகர் நினைத்தார். பக்கத்து மேஜையில் உலக வரைபடம் ஒன்று இருந்தது அவர் கண்களில் பட்டது. வந்தது ஒரு ஐடியா! அதை எடுத்து வேறு வேறு வடிவில் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெட்டிக்குள் அத்துண்டுகளை போட்டு அவனிடம் கொடுத்து தம்பி, இதிலுள்ள எல்லாத் துண்டுகளையும் சரியாக சேர்த்து மறுபடியும் முழுமையான உலக வரைபடத்தை கொண்டு வா என்று சொன்னார். இவன் இந்த படத்தை சரியாக வைப்பதற்குள் நான் என் பிரசங்க குறிப்புகளை எடுத்து விடுவேன் என்று போதகர் தனக்குள்ளே எண்ணினார்.
சற்றும் தாமதம் இல்லாமல் மூன்று நிமிடத்திற்குள்ளாகவே அதை சரியாக வைத்து தன் அப்பாவினிடத்தில் வந்து காட்டினான் அந்த சிறுவன். போதகருக்கோ தனது மகனுக்குள்ளே இவ்வளவு அறிவாற்றலா என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம். என் வேலை இன்னும் முடியவில்லையே என்ற கவலை மற்றொரு பக்கம். அருகில் நின்ற தன் மகனைப் பார்த்து, இவ்வளவு விரைவாக இதை எப்படி உன்னால் சேர்க்க முடிந்தது? என்று கேட்டார். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை டாடி, அந்தப் படத்திற்கு பின்பாக ஒரு மனுஷன் படம் இருந்தது. அந்த மனுஷனை சரியாக வைத்தேன், உலக வரைப்படம் சரியாகிவிட்டது என்று சொன்னான். போதகருக்கு இன்ப அதிர்ச்சி. அவருடைய மகன் வாயிலாக தேவன் தன்னிடம் பேசி விட்டதாக உணர்ந்தார். அடுத்த நாள் சபையிலே பிரசங்கித்தார் மனிதனே, முதலாவது ஒரு தனிமனிதனாக நம்மை சரி செய்து கொள்ளும் போது, நம்மை சுற்றியுள்ள உலகம் தானாகவே சரியாகும் என்று.
வேதம் இவ்வாறு சொல்கிறது "அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்" (நீதி. 23:7). "மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்" (நீதி.13:2). நாம் அநேக வேளைகளில், நமது சூழ்நிலைகளை மாற்றுவதற்கும், நம்மைச் சுற்றியுள்ள மக்களை மாற்றுவதற்குமே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிரச்சனைக்கு பதிலை வெளியே தேடுகிறோம். ஆனால் நமக்கான தீர்வு நமக்குள்ளேயேதான் இருக்கிறது, நம்மை மாற்றிக் கொள்வதிலேதான் இருக்கிறது. பிரதானமாக, வேதத்தின்படி நம்முடைய மனதின் எண்ணங்களையும், வாயின் வார்த்தைகளையும் சீர்ப்படுத்தினால், தலைகீழாக இருக்கும் வாழ்க்கைக் கூட சீராக, நன்மையாக மாறும். தேவ தயவோடு முயற்சிப்போமா?
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் சிறுவர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864