Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.02.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 26-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 26.02.2026

 

தருணத்தை தவறவிடாதே

 

"...மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்" - ஆதி. 28:16

 

25 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கிராமத்தில் வசித்தேன். அநேக மக்கள் வசித்த மிகவும் செழிப்பான கிராமம். ஆனால் கல்வி அறிவு அதிகம் இல்லாதவர்கள். தேவன் என் உள்ளத்தில் அங்கிருந்த பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கும்படி பேசியும், நான் அதை அசட்டை பண்ணி விட்டேன். இந்த ஊழியத்திற்கு வந்த பின்பு தான் டியூஷன் மூலம் அநேக பிள்ளைகள் தேவனை அறிந்து கொள்கின்றனர் என்று கண்கூடாகப் பார்த்தேன். ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் ஒரு நல்லதொரு வாய்ப்பை இழந்து விட்டேனே என்று மிகவும் வருந்தினேன். ஆம், நமக்கு கிடைக்கும் தருணங்களையும், சிலாக்கியங்களையும் நாம் ஒருபோதும் தவறவிடக் கூடாது என்பதில் நாம் கருத்தாய் இருக்க வேண்டும்.

  

வேதத்திலே, இதுவே யாக்கோபு என்ற பக்தனின் அனுபவமாகவும் இருந்தது. யாக்கோபு, தான் ஆபிரகாமின் பேரன் என்பதையும், ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தையும் இத்தனை சிலாக்கியங்கள் நமக்கு இருக்கிறது என்பதையும் நினைவில் வைக்கவில்லை. வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் ஆரானை நோக்கிப் பிரயாணப்படுகிறார். சூரியன் அஸ்தமித்தபடியினால் அவ்விடத்திலே நித்திரை செய்யும்படி, கற்களில் ஒன்றை எடுத்து தலையின் கீழ் வைத்து படுத்துக் கொள்கிறார். அங்கே சொப்பனத்தில் கர்த்தர் யாக்கோபுக்கு தரிசனமாகி, உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி.12:3) என்று ஆபிரகாமுக்கு கொடுத்த அதே வாக்குத்தத்தத்தை கூறுகிறார். நீ போகும் இடமெல்லாம் உன்னோடு கூட இருப்பேன் என்றும் வாக்கு கொடுக்கிறார். காலையில் எழுந்தவுடன் யாக்கோபு உண்மையாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார், இதனை அறியாதிருந்தேன் என்று கூறுகிறார். எரேமியா 23:24 ல் நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். நாமும் கூட தேவனது பிரசன்னத்தை சாதாரண இடங்களிலும் உணர முடியும். அவர் பிரசன்னத்தை தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் போது, நமது கடந்த கால துயரங்கள் ஒன்றும் இல்லாததாகத் தோன்றும்.  

 

பிரியமானவர்களே, நமது வாழ்வில் தேவனின் சித்தத்தை அறிய நமது கண்களும், செவிகளும் திறந்தவைகளாக இருக்கின்றதா? 50,000 கிராமங்களில் ஒரு கோடி ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை இந்த உலகத்திற்கு நாம் பரிசாகக் கொடுக்கும்போது, பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் நமக்குள் ஆசீர்வதிக்கப்படும். தேவப் பிரசன்னத்தை உணர்ந்த நாம், தேவனின் சித்தத்தை செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போமா? ஆமென். 

- Mrs. பியூலா  

 

ஜெபக்குறிப்பு:-

கண்மணிப் பிள்ளைகள் இயேசுவுக்காக ஜெபத்திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகள் கிறிஸ்துவுக்காக எழும்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al