By Village Missionary Movement
Tuesday, 24-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 24.02.2026
கர்த்தருக்குள் திடப்படுங்கள்
“...தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” - 1 சாமுவேல் 30:6
நம் அனுதின வாழ்வில் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது. கடவுளுடைய அன்பு, இரக்கம் இல்லாமல் நாம் ஒரு வினாடியும் உயிர் வாழ முடியாது. இப்படிப்பட்ட உலகிலே, நம் அன்றாட வாழ்வில் நம்மை சோர்ந்து போகச் செய்கிறவர்கள் அநேகர். ஒரு சிலரே நம்மை உற்சாகப்படுத்துவார்கள்.
அரசனாகிய தாவீது, ஆடுகளை மேய்க்கும் காலத்தில் தேவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஆடுகளை மேய்க்கும் போது தனது கையில் ஒரு இசைக்கருவியை வைத்திருந்தான் (கின்னரம்). தனது இசைக்கருவியினால் தேவனைத் துதித்துப்பாடி ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர்ந்தார். மேய்ப்பனாகிய தாவீது அநேக சங்கீதங்களை இயற்ற அது உதவிற்று. அரக்கனான கோலியாத்தை தேவன் மேல் வைத்த நம்பிக்கையால் கொன்றான். கோலியாத்தை தாவீது கொல்லாமல் இருந்திருந்தால் சவுலும், இஸ்ரவேலரும் பெலிஸ்தருக்கு கப்பம் கட்டி கடின வாழ்க்கை நடத்தி இருப்பார்கள். ஆனால் தாவீது தனது மாமனார் சவுலின் சவாலை சமாளிப்பது தான் மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. சவுல், மக்கள் தாவீதை உயர்த்திப் புகழ்ந்து பேசியதால் பொறாமை கொண்டார். அவரை கொல்ல பல தடவை முயற்சி செய்தார். அது மட்டுமல்லாமல் தாவீதுடன் இருந்த மக்களும் அவரைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தனர். இவ்வாறு தாவீது எதிர்ப்பை சந்தித்தார்.
நீங்களும் பிரச்சனைகளின் ஊடே செல்லுகிற போது தாவீதை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் தன்னை கர்த்தரில் திடப்படுத்திக் கொண்டார் என வேதத்தில் வாசிக்கிறோம். ஆபத்துக் காலத்தில் அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்து அவனை விடுவிப்பேன் என கர்த்தர் சொல்கின்றார்.
அன்பானவர்களே! குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், அயலகத்தார் உங்களை எந்நேரம் வேண்டுமானாலும் உதறித்தள்ளலாம். அந்தகார லோகாதிபதியானவன் மக்களின் மனதை கசப்பினால் நிரப்பி வருகின்றான். மனைவியை, கணவனை விட்டு அல்லது பிள்ளைகளை பெற்றோரை விட்டுப் பிரிப்பதே அவனது வேலை. அநேக வருடங்களுக்கு முன் தேவன் எனக்குள்ளே ஒரு உணர்வைத் தந்தார். “அடிக்கடி உன்னிடம் வந்து பிறரைக் குறித்து குறை கூறுபவர்கள், உன்னைக் குறித்தும் பிறரிடம் குறை கூறுவார்கள் என்பது உனக்குத் தெரியுமா?” என்று. வாழ்வில் பல பிரச்சனைகளுடன் கடந்து செல்லும் போது உங்களை கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொள்ளுங்கள். அனாதி தேவன் உங்களை அற்புதமாக பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பார், வழிநடத்துவார், வெற்றி தருவார். ஆமென்.
- Dr.L. ஜெயபாலன்
ஜெபக்குறிப்பு:-
கண்மணிப் பிள்ளைகள் இயேசுவுக்காக ஜெபத்திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864