By Village Missionary Movement
Monday, 23-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 23.02.2026
துரத்தப்பட்ட யெப்தா
“...யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்" - நியா. 11:11
ராஜூ ஆலயத்தின் எல்லா ஜெபங்களிலும் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் எல்லா ஜெபங்களிலும் அழுது கொண்டே தான் இருப்பார். இதனைப் பார்த்த போதகர், ராஜூவிடம் ஏன் எப்போதும் அழுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராஜூ நான் நம்பின என் நண்பர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டு விலகிச் சென்றனர். என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். போதகர் அவரிடம், நாம் நம்பும் உறவுகள் நம்மை விட்டு விலகும் போது நம் மனம் உடைகின்றது. ஆனால் நம்மை விட்டு விலகாத கர்த்தரிடம் நாம் ஜெபிக்கும்போது உடைந்த உள்ளத்தை சீராக்குவார், விலகிச் சென்ற உறவுகளிடமும் சமாதானம் பெற செய்வார் என்றார்.
வேதத்திலே யெப்தாவின் வாழ்வும் உறவுகளால் துரத்தப்பட்ட வாழ்வாகத்தான் இருந்தது. அவரது துவக்கம் ஒரு பரஸ்திரீயின் மகனாகத்தான் இருந்தது. அப்படியானால் அவர் எவ்வளவு நிந்தையை சுமந்திருப்பார். அவருடைய தகப்பனின் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் யெப்தாவைப் பகைத்து, சுதந்தரத்தில் உனக்கு பங்கு இல்லை என்று துரத்தி விட்டனர். அவன் அங்கிருந்து போய் ஒரு யுத்த வீரனானான். யெப்தாவிடம் இருந்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் தேவ சமுகத்தை தேடி தன் காரியங்களை எல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் சொன்னார். யெப்தாவின் சகோதரர்கள் எல்லாம் ஒன்று கூடடி அவரை சந்திக்க வந்தனர். காரணம்! ஒரு யுத்தம் வந்தது. அதனால் அவரை துரத்தியவர்கள் நீ தான் எங்களுக்கு தலைவனாய், சேனைகளுக்கு எல்லாம் அதிபதியாக இருக்க வேண்டும் என்று அழைத்தனர். கர்த்தர் ஏன் யெப்தா துரத்தப்படும் சூழ்நிலையை அனுமதித்தார் என்றால், இதற்காகத்தான்! ஒரு வேளை யெப்தா துரத்தப்படவில்லையெனில் யெப்தாவின் வெற்றி பெரிதாய் தெரிந்திருக்காது. துரத்தப்பட்டதால், மூப்பர்களே யெப்தா இருக்கும் இடத்தைத் தேடி வந்து யெப்தாவை அழைத்தார்கள். யெப்தா அந்த இடத்திற்குப் போய் யுத்தம் செய்தார். தேவ சமுகத்தை சார்ந்து நின்ற யெப்தாவிற்கு துணையாய் கர்த்தர் நின்று வெற்றி பெறச் செய்தார். கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கியது.
இன்று நாமும் பலவிதமான நிந்தையை சுமந்து கொண்டிருக்கலாம். மகிழ்ச்சியாய் இருப்பது போல காட்டிக் கொண்டு, உள்ளத்தில் வேதனையோடு அழுது கொண்டு இருக்கலாம். நம்முடைய நிந்தையை மாற்ற, மனக்காயங்களை ஆற்ற, நம் மீது அக்கறையுள்ள ஆண்டவர், நிழலைப் போல நம்முடன் வந்து கொண்டே இருக்கிறார். நாம் அனாதைகள் அல்ல, கைவிடப்பட்டவர்கள் அல்ல, யெப்தாவை போல நாமும் நம்முடைய காரியங்களை எல்லாம் மனிதர்களிடத்தில் சொல்லாமல் கர்த்தரிடத்தில் சொல்லும்போது நமக்கு எட்டாத, நாம் நினைத்துக் கூட பார்க்காத உயரத்தில் நம்மை கொண்டு போய் வைத்து, நம்மை பிறருக்கு ஆசிர்வாதமாய் மாற்றுவார்.
- Mrs. லலிதா
ஜெபக்குறிப்பு:-
தமிழ்நாட்டிலுள்ள ஊழியர்களின் பிள்ளைகள் Arise Joshua & Esther திட்டத்தில் சேர்க்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864