By Village Missionary Movement
Saturday, 21-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 21.02.2026
கடமை
“...கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்” - எண். 23:12
அகஸ்டின் என்ற வாலிபனுக்கு வேலை செய்கிற இடத்தில் கிறிஸ்துவை அறியாத அநேக நண்பர்கள் இருந்தார்கள். அவன் எந்த பேதமில்லாமல் எல்லோரோடும் பழகுகிறான் என பலரும் அவனை வியந்து பார்ப்பதுண்டு. ஒரு முறை தனது நண்பர் விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்ட அகஸ்டின், அவருக்கு இரத்தம் கொடுத்து பணமும் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான். பின்பு ஜெபித்து விட்டு இரவு தூங்கச் சென்ற போது, கனவில் எக்காள சத்தத்தையும், அநேகர் வரிசையில் நிற்பதையும் கண்டான். வழியில் ஒரு தூதன் நின்று நீ வலது புறம் போ, நீ இடது புறம் போ என சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வலது புறம் போகிறவர்கள் மகிழ்ச்சியோடு சென்றனர். அங்கு பெரிய பிரகாசமான வெளிச்சம் இருந்தது. இடது புறம் போகிறவர்கள் “அய்யோ” என கதறி ஓலமிட்டனர். அப்போது அகஸ்டினை தூதன் வலது புறம் போகச் சொன்னார். அகஸ்டினின் நண்பரையோ இடதுபுறம் போகச் சொன்னார் தூதன்.
நண்பர் தூதனிடம் அவனையும் இடது புறம் அனுப்புங்கள். அவன் சிறுவயது முதல் என்னோடு பழகியும் கிறிஸ்துவைப் பற்றி சொல்லவில்லை என்றான். அகஸ்டினோ இவன் என்னிடம் கிறிஸ்துவைப் பற்றி கேட்கவில்லை என்றான். தூதன் இவனுக்கு அநேக உதவிகள் செய்தாயே என்றார். உடனே அகஸ்டின், அவன் என் நண்பன் அவனுக்கு உதவி செய்வது என் கடமை அதனால் செய்தேன் என்றான். உடனே தூதன் நீ கிறிஸ்துவின் பிள்ளை, சீஷன் என்றால் அவரைப் பற்றி சொல்வதும் உன் கடமை. இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு செல்லும் முன் தம் சீஷருக்கு இட்ட கடைசி கட்டளையும் அதுவே என்றார். தூக்கத்திலிருந்து கண் விழித்த அகஸ்டின் பதறி எழுந்தான். வேதத்தை திறந்து வாசித்து விட்டு, ஆண்டவரே காலை விடிந்ததும் என் நண்பனுக்கு உம்மை பற்றி சொல்வேன் என ஜெபித்துவிட்டு படுத்து உறங்கினான். காலையில் ஆஸ்பத்திரியிலிருக்கும் தன் நண்பனுக்கு இயேசுவைப் பற்றி கூறி இயேசு சுகம் தருவார் என சொல்லி ஜெபித்து வந்தான்.
இதை வாசிக்கும் அன்பரே, கிறிஸ்துவைப் பற்றி அறிந்த நாம், அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பது நமது கடமை. பவுல் கொரிந்தியருக்கு எழுதும் போது கூறுகிறார், “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” (1 கொரி. 9:16) என்கிறார். ஆம், நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி சொல்லாவிட்டால், நியாயத்தீர்ப்பு நாளில் அகஸ்டினின் நண்பரைப் போல் நீங்களும் நீயாயந்தீர்க்கப்படுவீர்கள். எனவே இன்றே இயேசுவை குறித்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கூறுங்கள். தேவன் உங்கள் முயற்சியை வாய்க்கச்செய்வார். ஆமென்.
- M. ஸ்டாலின் ராஜா
ஜெபக்குறிப்பு:-
Arise Joshua & Esther திட்டத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864