Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.02.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 19-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 19.02.2026

 

எது பெரிய பாவம்?

 

“நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” - 1 யோவான் 1:8

 

ஒரு போதகரிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன், நான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு உண்டா? என்றான். அடுத்தவனோ, நான் இவன் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன? என்றான். போதகர் சிரித்தார். முதல் ஆளிடம், நீ போய் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வா என்றார். இரண்டாமவனிடம், நீ போய் இந்த சாக்கு நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். இப்போது போதகர் சொன்னார், “சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார்.

 

முதலாமானவன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன், இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்? என்று கேட்டான். போதகர் சொன்னார், முடியாதல்லவா அவன் பெரிய தவறு செய்திருந்தாலும் அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் இரட்சிக்கப்பட்டான். ஆனால் நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும், அவை பாவம் என்று கூட உணராதவன். உன்னால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு இரட்சிப்பு சுலபம். உனக்குத் தான் இரட்சிப்பு என்பது மிகக் கடினம் என்றார்.

 

வேதத்தில் சிம்சோன் பிறக்கும் முன்பே தேவனால் முன்குறிக்கப்பட்டவன், பயங்கர பராக்கிரமசாலி. 300 நரிகளைப் பிடித்து இரண்டு இரண்டாக நரியின் வாலை கட்டி, தீ பந்தத்தை கட்டி எதிரிகளின் விளைச்சலை அழித்தவன். சிங்கத்தின் வாயை இரண்டாக பிளந்தவன், ஒரு தாடை எலும்பினால் 1000 பேரைக் கொன்றவன். பரிசுத்தாவியின் அபிஷேகம் நிரம்ப பெற்றவன். தான் யார் என்பதனை மறந்து தேவன் சொன்ன வார்த்தைகளை தள்ளி, பாவத்தில் ஒவ்வொருமுறை விழுந்த போதும் அவன் தன் பலத்தையே நம்பினான். அந்தோ பரிதாபம்! தேவன் அவனை விட்டு விலகினார் என்பதனை கூட அறியாமல், எப்போதும் போல தனக்கு பலம் உண்டென எண்ணி எழுந்தான். முடிவு என்ன தெரியுமா? எதிரிகள் அவன் கண்களைப் பிடிங்கி வேடிக்கையாக்கி அவனை பார்த்து நகைத்தார்கள். பயங்கர பராக்கிரமசாலி பரிதாபமாய் இறந்து போனான்.  

 

எனக்கன்பானவர்களே, நான் ஒன்றும் பெரிய பாவம் செய்வதில்லை. சின்ன சின்ன தவறுகள் செய்வது பாவமில்லை என்று உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொன்னாலும், சிறிய அலட்சியம் கூட பாவத்தில் முடியும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதனை அறிந்தவர்களாய் பாவத்தை உதறி தள்ளிவிட்டு, இயேசுவை நோக்கியே நம் ஓட்டத்தை ஓடி முடிப்போம். உங்கள் கண்கள் கிறிஸ்துவை நோக்கியே இருக்கட்டும். நித்திய நியாயாதிபதியாம் இயேசு வருகிறார் சந்திக்க நீ ஆயத்தம் தானா?

- R. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு:-

Child Care Child திட்டத்தில் இணைந்தவர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al