By Village Missionary Movement
Tuesday, 17-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 17.02.2026
பாவங்கள் கழுவப்படட்டும்
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து... நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" - 1 யோவான் 1:9
இத்தாலியில் பிளாரன்ஸ் என்ற பட்டணத்தில் மிகப்பெரிய இரட்சிப்பின் எழுப்புதலைக் கொண்டு வந்தவர் தான் ஸ்வர்ணரோலா என்னும் ஒரு தேவ ஊழியர். இவருடைய நாட்களில், பாவத்தையும் இரட்சிப்பையும் குறித்துப் பிரசங்கித்தால் ஜனங்கள் எழுந்து சென்று விடுவர். தேவாலயங்களும் வெறிச்சோடி இருக்கும். இதைக்கண்ட ஸ்வர்ணரோலா, திருச்சபைகளுக்காக, இரட்சிக்கப்படாத ஜனங்களுக்காக உபவாசித்து, மணிக்கணக்காக முழங்காலில் நின்று ஜெபிப்பார். தேவனுடைய வழி நடத்துதலுக்காக அழுது ஜெபிப்பதை தன் வழக்கமாக்கினார். ஆவியானவர் இவருக்கு பல காரியங்களைத் தீர்க்கதரிசனமாக அறிவிக்க ஆரம்பித்தார். இவருடைய ஜெபத்தின் பலனாக தேவாலயங்கள் மக்கள் உட்காரக்கூட இடமின்றி நிரம்பி வழிந்தன.
இவ்வாறாக இப்பட்டணம் இரட்சிப்பின் செய்தியால் அசைக்கப்பட்டது. பாவத்தைக் குறித்த இவரது பிரசங்கமும், வேத வசனங்களும் ஜனங்களின் இதயத்தில் கிரியை செய்தது. வல்லமையான தேவனுடைய வார்த்தைகள் அவர்கள் வாழ்வை மாற்றியது. தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தங்களை சுத்திகரித்து, இரட்சிப்பின் சந்தோஷத்தை அடைந்து, பரிசுத்த வாழ்வு வாழ தங்களை அர்ப்பணித்தார்கள் இப்பட்டணத்து மக்கள்.
அருமையான தேவ ஜனமே! உங்கள் பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளதா? அல்லது பாவம் கழுவப்பட்ட நான் மீண்டும் பாவத்தில் விழுந்துவிட்டேனே, இயேசு என்னையும் மன்னிப்பாரா என்று பரிதவித்துக் கொண்டு இருக்கிறீர்களா? பாவத்தில் விழுந்துவிட்ட தாவீதும் கூட, தன் பாவத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினார் (சங்கீதம் 51). சங்கீதம் 32: 5 ல் "நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்" என்று மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதத்தில் எழுதப்பட்டுள்ளது.
அன்பான தேவப்பிள்ளையே, குற்றமனசாட்சிக்கு இடம் கொடாமல், பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்தால், அதை விட்டுவிட தேவன் பெலன் கொடுப்பார். தனியாகவும், நண்பர்களாகவும் சேர்ந்து வேதத்தை வாசித்து தினமும் தியானம் செய்யுங்கள். தேவப்பிள்ளைகளின் ஐக்கியத்தை நாடுங்கள். உங்களுடைய இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பிறருடன் சாட்சியாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பெற்றுக் கொண்ட இரட்சிப்பில் நிலைத்திருக்க தேவன் கிருபைச் செய்வாராக.
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
வடமாநில மிஷனெரிகளை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864