By Village Missionary Movement
Thursday, 12-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 12.02.2026
ஏற்றுக்கொள்ளுதல்
“…அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்” - மத். 9:10
1980 களில் பிரபல சுவிசேஷகராக இருந்த ஜிம் வேக்கர், கிறிஸ்தவ டி.வி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் ஒரு முறை பணக் கையாடல், தவறான நடக்கை காரணமாக சிறையிலடைக்கப்பட்டார். கிறிஸ்தவ வட்டாரமே அவர் மேல் சீறிப்பாய்ந்தது. ஆனால் பில்லி கிரஹாமும், அவரது மனைவியும் ஜிம் வேக்கர் விடுதலையான போது அவரை உணவருந்தும்படி வீட்டிற்கு அழைத்தனர். சாப்பாட்டு மேஜையில் பேசிக் கொண்டிருந்த வேளையில் ஒருவரது விலாசத்தைக் கொடுப்பதற்காக ஜிம் பேப்பர் கவரை எடுத்த போது, பில்லி கிரஹாமின் மனைவி, உங்களிடம் பர்ஸ் இல்லையா? என்று கேட்டார்கள். நான் சிறையிலிருந்த போது என் பர்ஸை யாரோ எடுத்துவிட்டார்கள். நான்கு வருடங்களாக முக்கியமானவைகளை இப்படி பேப்பர் கவரில் தான் வைத்துக் கொள்கிறேன் என்றார். உடனே பில்லி கிரஹாமின் மனைவி ஒரு புதிய பர்ஸைக் கொண்டு வந்து கொடுத்தார். அன்று முதல் ஜிம் வேக்கர் பில்லி கிரஹாமின் பர்ஸை பயன்படுத்தினார். பழைய பிரச்சனைகளை குறித்தோ எதையும் விசாரிக்காமல் அன்போடு அவரிடம் உரையாடி ஜெபித்து வழியனுப்பினர்.
ஆம், இதே போல் தான் இயேசு கிறிஸ்து தாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் பாவிகள், ஆயக்காரர் என பாராமல் அனைவரையும் ஏற்றுக் கொண்டார், அவர்களிடம் அன்பாகப் பழகினார். ஆயக்காரரான சகேயுவின் வீட்டிற்கு சென்று இரட்சிப்பை கட்டளையிட்டார். ஒரு முறை விபசாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிபட்ட ஸ்திரீயை, வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே என்று சொல்லி கல்லெறிய ஆயத்தமாய் இருந்தனர். அப்போது இயேசு கிறிஸ்து உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்றார். உடனே பெரியோர் முதல் சிறியோர் வரை ஒவ்வொருவராய் போய்விட்டார்கள்.
மற்றவர்களை பாவிகளாக, குற்றவாளிகளாகப் பார்க்கிற நாமும் ஏதோ ஒரு பாவத்தில் தான் இருக்கிறோம். அதனையே பவுல், “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” என ரோமர் 3:10 ல் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவும் கூட பிதா ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை என்கிறார். அப்படியிருக்க நாம் மற்றவர்களிடம் பழக, அவர்களை ஏற்றுக் கொள்ள தயக்கம் கொள்வதேன்?
பிரியமானவர்களே, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). நாமும் நம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக எல்லோரையும் ஏற்றுக் கொள்வோம். மேலும் எல்லாரும் ஒரு காலத்தில் பாவம் செய்தவர்கள்தான் என்று சொல்லி, மீண்டும் மீண்டும் பாவத்திலேயே துணிகரமாக உழன்று கொண்டுமில்லாமல் கர்த்தரின் கிருபையாலே மீட்படைவோம். இன்றே இரட்சண்ய நாள்!
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:-
மிஷனெரி பயிற்சி கட்டிடம் கட்டுவதற்கான அரசாங்க அனுமதி கிடைக்க
ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864