By Village Missionary Movement
Wednesday, 11-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 11.02.2026
இயேசுவுக்காய் வாழ்வோம்
“தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்” - லூக்கா 9:24
ஒரு சமயம் ஒரு தீவிரவாத கும்பல் கிறிஸ்தவர்கள் சிலரைப் பிடித்து, நீங்கள் கிறிஸ்துவை மறுதலித்தால் உங்களை உயிரோடு விட்டுவிடுவோம். இல்லையென்றால் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அவர்கள் அனைவருமே கிறிஸ்துவுக்காக தம் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாகயிருந்தனர். அந்தத் தீவிரவாதிகளில் ஒருவன் முதலாவது நின்றவரைப் பார்த்து, நீ இயேசுவை மறுதலித்தால் நான் இப்பொழுதே உன்னை விட்டுவிடுகிறேன் என்றான். அதற்கு அவர், இயேசுகிறிஸ்து உன்னையும் என்னையும் நேசிக்கிறார் என்றார். உடனே அவன் தன் கையிலிருந்த கத்தியால் அவரை கொலை செய்தான். இப்படியாக அவர்கள் ஒவ்வொருவருடைய தலையும் துண்டிக்கப்பட்டது.
கடைசியாக நின்ற மனிதர் மனதில் பயத்தோடும், கலக்கத்தோடும் கர்த்தரை மறுதலித்து விடலாம் என்ற எண்ணத்தோடு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது தீவிரவாதக் கும்பல் தலைவன் ஒரு விஷயத்தை கவனித்துக் கொண்டிருந்தான். கிறிஸ்துவுக்காக மரிக்கிறவர்கள் எந்த மரணபயமுமின்றி தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்களது கழுத்தைத் துண்டிக்கும் அந்த வேளையில் அவர்கள் தலையின்மேல் ஒரு கிரீடம் அமருவதை அவன் கவனித்தான். இது என்ன என்று அவன் யோசித்துக்கொண்டிருந்த போது, மரணபயத்தோடு இருந்த அந்த கிறிஸ்தவருக்கு அந்த கிரீடம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. அதைப்பார்த்த அந்த தலைவனுக்கு மிகுந்த ஆச்சரியம்! அது பரலோகத்திலிருந்து இறங்கி வந்த ஜீவகிரீடம் என்று அவனுக்கு உண்மை புரிந்துவிட்டது. கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்றும், கிறிஸ்துவுக்காக மரிப்பதன் மேன்மையைப் புரிந்துக் கொண்டான். உடனே அவரிடத்தில் நான் அந்த இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். என்னை கொலை செய்யுங்கள் என்று தன்னை ஒப்புக்கொடுத்தார். அவருக்கு அந்த கிரீடம் வைக்கப்பட்டது, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார். அதே சமயம் தன் ஜீவனை இரட்சிக்க விரும்பின அந்தக் கிறிஸ்தவனையும் அவர்கள் கொலை செய்தார்கள். ஆனால் அவன் விருப்பமில்லாமல் கிறிஸ்துவின் மீது அன்பில்லாமல் கட்டாயத்தின் பேரில் தன் ஜீவனை இழந்தான், பரலோக ராஜ்யத்தையும் இழந்தான்.
ஆம், அன்பு சகோதர சகோதரிகளே, வாழ்வது ஒருமுறை அதை இயேசுவுக்காக வாழ்வோம், அதுவே மெய்யான வாழ்க்கை. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). எனவே மாயையான இவ்வுலகில் மாயையான அன்பிற்கும், உலகப்பூர்வமான அற்பகாரியங்களுக்கும் நம்முடைய நேரத்தை செலவிடாமல், இயேசுவுக்காக செலவிடுவோம். இயேசுவுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் இயேசுவை இழந்துவிடாதே மகனே! மகளே! ஆமென்.
- H. பிரேமலதா
ஜெபக்குறிப்பு:-
நம் வளாகத்தில் மிஷன் பள்ளி கட்டுவதற்கான அரசாங்க அனுமதி கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864