By Village Missionary Movement
Friday, 06-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 06.02.2026
காண்கிற தேவன்
“…நீர் என்னைக் காண்கிற தேவன்…” - ஆதி. 16:13
நம் ஆண்டவருக்கு எத்தனை அருமையான பெயர்! ஆண்டவர் ஆகாரை மட்டும் காண்கிறவர் அல்ல. நம் ஒவ்வொருவரையும் காண்கிறார். வேதத்தில் அநேக நொறுங்குண்ட நெஞ்சங்களைப் பார்த்து, அவர்களின் துயரைத் துடைத்தவர். சாராய்க்குப் பிள்ளையில்லாததால், அடிமை பெண்ணாகிய ஆகாரை தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாக கொடுத்தாள். ஆகார் கர்ப்பவதியானபோது தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். ஆகாரை சாராய் கடினமாக நடத்தியதால், அவள் தன் நாச்சியாரை விட்டு ஓடிப்போனாள். அவள் மனதின் அங்கலாய்ப்பைத் தேவன் பார்த்து, அவளை ஆசீர்வதித்தார். அந்த வனாந்தரத்தில் என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு, “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று பேரிட்டாள்.
அதே போல 1 சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில் குழந்தை இல்லாத அன்னாளின் மனதை நோகடித்தாள் பெனின்னாள். அன்னாள், தன் நொறுங்கி போன இதயத்தை தேவனின் சமுகத்தில் ஊற்றி ஜெபித்தாள். அதன் பின் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. தேவன் அவளுடைய இதய அங்கலாய்ப்பைக் கண்டு சாமுவேல் தீர்க்கதரிசியை அவளுக்கு மகனாக கொடுத்தார். எத்தனை பெரிய ஆசீர்வாதம் பாருங்கள்! நம் தேவன் மனிதர்களைப் போல முகத்தை பார்ப்பவர் அல்ல, இருதயத்தை பார்க்கிறார். ஒருவரும் அறியாமல் நாம் சிந்தும் கண்ணீரையும் காண்கிறார், நொறுங்குண்ட இதயத்தை பார்க்கிறார். மனவுருக்கமுள்ளவர் நம் கண்ணீருக்கு பதில் தருகிறார்.
அன்று இஸ்ரவேல் மக்கள் ஆளோட்டிகளினால் பட்ட இன்னல்களை கண்டார். அவர்களுடைய பெருமூச்சைக் கேட்டு உடனே விடுவிக்க இரட்சகனாக மோசேயை அனுப்பி விடுவித்த அதே தேவன், நம் கண்ணீரைக் காண்கிறார். நம் நொறுங்குண்ட இதயத்தின் குமுறலைக் கேட்கிறார். நிச்சயம் நம்மை விடுவித்து, நம்மை ஆற்றித் தேற்றுவார். “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங்கீதம் 34:18). இத்தகைய மனவுருக்கமுள்ள தேவனை நாம் பற்றிக்கொள்வோம். அன்னாளை போல இதயத்தை ஊற்றி ஜெபிப்போம், அதன் பின் நாம் துக்கமுகமாய் இருக்க தேவையில்லை. ஆகாரை கண்ட அதே தேவன் நம்மையும் காண்கிறார். நம்மையும் ஆற்றி, தேற்றி, விடுவிப்பார். நம்பிக்கையோடு இருப்போம், நம் காயங்கள் ஆற்றப்படும். ஆமென்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:-
டியூஷன் சென்டரின் கற்றுத்தரும் ஆசிரியர்களின் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864