By Village Missionary Movement
Saturday, 31-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 31.01.2026
நல்ல மாதிரி
"...தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்" - 1 பேதுரு 2:21
ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியைக் கேட்டார். ஒரு மரத்தின் கிளையில் நான்கு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. அவற்றில் மூன்று பறவைகள் அந்த மரத்திலிருந்து பறந்து செல்லலாம் என்று முடிவு செய்கின்றன. இப்போது அந்த மரத்தில் மீதம் எத்தனை பறவைகள் இருக்கும்? என்று கேட்டார். கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் உடனடியாக ஒரே ஒரு பறவை தான் இருக்கும் என்று பதிலளித்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் எழுந்து இல்லை ஐயா, நான்கு பறவைகளும் மரத்தில் தான் இருக்கும் என்று கூறினான். வகுப்பில் இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தனர். பேராசிரியர் அது எப்படி சாத்தியம்? விளக்கமாகச் சொல் என்றார். அதற்கு அந்த மாணவன் ஐயா, அந்த மூன்று பறவைகளும் பறந்து செல்ல வேண்டும் என்று முடிவு மட்டுமே எடுத்தன. ஆனால் அவை பறந்து செல்லவில்லை.
ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பலவிதமான அற்புதங்களைச் செய்தார். பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அனேகரை அவர் சொஸ்தமாக்கினார். அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார். ஆண்டவராகிய இயேசுவை நாம் கவனித்துப் பார்ப்போம் என்றால், அவர் முந்தைய நாளில், அநேக அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்து முடித்து, மறுநாளில் அதிகாலையில் ஜெபிக்கும்படி எழும்புகிறார். அதிகாலையில் எழுந்து நாம் ஆண்டவரை தேடும்படி அவரே நமக்கு ஒரு முன்மாதிரியை காட்டிச் சென்றுள்ளார். இயேசுவானவர் தாம் செய்யவேண்டியதை செயலிலும் செய்து காண்பித்துள்ளார்.
இதை வாசிக்கின்றதான அன்பானவர்களே, புதிய வருடத்தில் பிரவேசித்திருக்கிற நம்மில் பலர், வாழ்க்கையில் பெரிய இலக்குகளை அடைய வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று எண்ணற்ற முடிவுகளை எடுக்கிறோம். இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது மிகவும் எளிது. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நம் திட்டங்களைக் குறித்து பெருமையாக பேசுவோம். ஆனால் அந்த முடிவுகளைச் செயல்படுத்துவதற்கான முதல் அடியை நம்மில் எத்தனை பேர் எடுத்து வைக்கிறோம்? முடிவுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடு, ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது பயணத்தின் தொடக்கம் மட்டுமே. அதை குறித்து பேசுபவர்கள் பலராக இருக்கலாம். ஆனால் செயலில் இறங்குபவர்கள் சிலரே. அந்த சிலரில் நம் இயேசுவும் ஒருவர். “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” என்று சொன்னவர், அதை செய்துக் காண்பித்துச் சென்றுள்ளாரே... நல்ல மாதிரியை நமக்கு வைத்தும் போயுள்ளார். இயேசுவை நாம் பின்பற்றுவோம். மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ்வோம்.
- Mrs. சக்தி சங்கர்
ஜெபக்குறிப்பு:-
மீடியா ஊழியத்திற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864