By Village Missionary Movement
Wednesday, 28-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 28.01.2026
சுயம் சாகட்டும்
“கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;…” - நீதி. 15:33
விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒரு முறை வாலிபன் ஒருவன் சென்று உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு அவர், கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன், என் சுயம் மரித்தது. அதுவே என் ஊழிய வெற்றிக்கு காரணம் என்றார். அப்போது அந்த வாலிபன் ஐயா, சுயத்திற்கு மரிப்பது என்றால் என்ன? என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி, நீ கல்லறை தோட்டத்திற்குப் போய், அங்கே கல்லறைகளில் எழுதப்பட்டிருக்கும் மரித்தவர்களின் பெயரை வாசித்து, அவர்களை பழித்து பேசு. பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவர்களை புகழ்ந்து பேசு. அதன் பிறகு என்னிடம் வா என்று சொல்லி அனுப்பினார்.
அப்படியே அந்த வாலிபன் கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று அவர்களை பழித்தும், புகழ்ந்தும் பேசி விட்டு திரும்பி வந்தான். ஜார்ஜ் முல்லர் அவனிடம் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டவர்கள், உன் மேல் சீறினார்களா? என்று கேட்டார். இல்லை, ஒருபதிலும் பேசவில்லை என்றான். நீ புகழ்ந்த போது பெருமையடைந்து உன்னைப் பாராட்டினார்களா? என்றார். இல்லை ஒன்றும் பேசவில்லை என்றான். ‘சுயம் மரித்தல்’ என்பது அதுதான். மற்றவர்களுடைய புகழ்ச்சி நம்மை பெருமையடையவும் செய்யக்கூடாது, இகழ்ச்சி நம்மை பாதிக்கவும் கூடாது. இந்த மனநிலையை, சிலுவையில் தம் ஜீவனை தந்த இயேசு கிறிஸ்துவின் உதவியோடு பெற்றுக்கொள்வது தான் சுயம் மரித்தல் என்று முல்லர் கூறினார்.
வேதத்தில் பவுலைக் குறித்து பார்த்தோமானால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற பல பாடுகளை சகித்தார். மெலித்தா என்ற தீவில் தங்கக் கூடிய சூழ்நிலை வந்தபோது மழைக்காகவும், குளிருக்காகவும் நெருப்பை மூட்டி, அங்கு எல்லோரும் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பவுல் சில விறகுகளை வாரி நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன் பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவருடைய கையைக் கவ்விக்கொண்டது. அதைப் பார்த்த ஜனங்கள், இந்த மனுஷன் கொலைபாதகன், சந்தேகமேயில்லை என்றார்கள். இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்ததும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். பவுலோ அந்த வார்த்தையைக் கேட்டபோது சுயத்தை அடக்கம் பண்ணி, அந்தப் பூச்சியைத் தீயிலே உதறி விட்டார். பவுல் வீக்கங்கண்டு சாவானென்று ஜனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சேதமும் வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய சுயமும் தினந்தோறும் சிலுவையில் சாகட்டும். அப்பொழுது தேவனுடைய நாமம் மகிமைப்படும்.
- J. P. ஹெப்சிபா
ஜெபக்குறிப்பு:-
நம்மிடம் முழு வேதாகமம் பெற்றவர்கள் தொடர்ந்து ஆசையாய் வாசிக்க ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864