By Village Missionary Movement
Friday, 23-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 23.01.2026
பிறர் நலனுக்காக..
”...இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச் சொன்னாள்” - எஸ்தர் 4:16
ஒரு முறை பெருந்தலைவர் காமராஜர், பரமக்குடி தரை பாலத்தை பார்த்த போது உடன் வந்த கல்வி அதிகாரியிடம், இந்த காட்டாற்றில் தண்ணீர் போகும் போது, ஆத்துக்கு இந்த பக்கம் உள்ள பள்ளி மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கூடத்திற்கு போவார்கள்? என கேட்டார். மழைக் காலத்தில் பள்ளிக்கு வரமாட்டார்கள் ஐயா, என்றார் அதிகாரி. அப்படின்னா ஆத்துக்கு இந்த பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டியது தானே என்றார். கல்வித்துறை விதிப்படி மூன்று மைல் தூரத்திற்குள் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால், பக்கத்தில் பள்ளிக்கூடத்திற்கு அனுமதி இல்லை என்றார் அதிகாரி. அவர் முடிப்பதற்குள் காட்டாற்றை காரணம் காட்டி இந்த பக்கம் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி கேளுங்க, நான் ஏற்பாடு பண்ணுறேன் என்றாராம் காமராஜர்.
இதை போலவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும், அவர் வாழ்ந்த நாட்களில் ஓய்வு நாள் பிரமாணத்தை மீறுவது சட்டப்படி குற்றம். ஆனால் அந்த நாளிலும் சூம்பின கையுடைய மனுஷனுடைய கையை சுகமாக்கினார் (மத். 12:10). நிமிரமுடியாத கூனியை குணமாக்கினார் (லூக்கா 13:11). 38 வருஷமாய் படுக்கையில் கிடந்த ஒரு மனுஷனை குணமாக்கினார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது (யோவான் 5:9). கிறிஸ்துவை பின்பற்றின சீஷர்களும், அதன் பின் நம் தேசத்திற்கு வந்த மிஷனெரிகளும், தேசத்தில் காணப்பட்ட சதி என்னும் மூடப்பழக்கம், கொத்தடிமை, பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுதல், குழந்தை திருமணம் போன்ற எல்லா தேவையற்ற கட்டுபாடுகளை ஒழிக்க போராடினாங்களே. நம்ம முப்பாட்டி எஸ்தர் ராணி, சட்டத்தை மீறி ராஜசமுகத்தில் பிரவேசித்து தன்னுடைய ஜனங்களுக்காக மன்றாடினாங்களே.
எனக்கன்பானவர்களே, இன்னும் நாம் லேவியனை போல, ஆசாரியனை போல பிசாசின் பிடியில் அகப்பட்டு குற்றுயிராய் கிடக்கும் மனிதர்களை கண்டும் காணாதவர்கள் போல பக்கமாய் விலகிப் போகும் நிலை இனிமேலாவது மாறட்டும். இயேசு கிறிஸ்து அன்புள்ளவர், அவரே மெய்யான தேவன் என்று அறிந்தும், ஊர் என்ன சொல்லும் உறவு என்ன சொல்லும் என தயங்கி நிற்கும் கூட்டத்தாரே! “Break the rule” பிறர் நலனுக்காக. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவருக்கு சாட்சியாய் வாழுவோம். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்துவையே பின்பற்றுவோமா? கர்த்தர் கரம் நம்மோடு.
- R. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:-
கைப்பிரதி ஊழியத்தின் மூலம் கைப்பிரதிகளை பெற்றவர்கள் கிறிஸ்துவை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864