By Village Missionary Movement
Monday, 19-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 19.01.2026
இன்றே இரட்சண்ய நாள்
“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” - எபேசியர் 5:16
காலம் தாழ்த்துதல் என்பது பொதுவாக நம் அனைவரிடமும் காணப்படும் விஷயம். மாணவர்கள் பாடங்களைப் படித்து முடிக்க, வீட்டுப்பாடங்களை செய்ய தாமதம் செய்வார்கள். நாம் பல வேளைகளில் வேதத்தை வாசித்து தியானிக்கக்கூட தாமதிக்கிறோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏற்ற காலத்தில் திருமுழுக்கின் மூலம் இயேசுவோடு ஐக்கியப்படச் செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொல்லி, அவர்களை இயேசுவண்டை வழி நடத்த தாமதிக்கிறோம்.
காலந்தாழ்த்துதல் மிகப்பெரிய பாதகங்களை ஏற்படுத்தும். ஏனெனில், கடந்து சென்றுவிட்ட காலம் மீண்டும் வருவதில்லை. ஒருமுறை கிடைத்த வாய்ப்பு மீண்டும் கிடைப்பது இல்லை. குறிப்பாக இரட்சிப்பின் விஷயத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. சத்தியத்தை நம் மனதில் கொடுத்து, ஆவியானவர் நம்மிடம் அதை ஏற்றுக்கொள்ளச் சொல்லும்போது, இப்போது வேண்டாம் இன்னொருமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மிகவும் தவறு. இது பிசாசின் தந்திரமாகும். அவ்வாறு செய்ததினிமித்தம் அநேகர் பரலோக வாழ்வையே இழந்திருக்கிறார்கள்.
ஒரு முறை தமிழ்நாட்டின் தென்பகுதியில் 40 நாட்கள் நற்செய்திகூட்டம் ஒன்று நடந்தபோது, ஒரு பெரியவர் சத்தியத்தை கேள்விப்பட்டு, தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், ஞானஸ்நானம் பெற்று சபை கூடிவருவதில் ஐக்கியப்பட வேண்டும் என்பதை மூளை அறிவின் படி ஏற்றுக் கொண்டார்.
ஆனால் உண்மையான இரட்சிப்பிற்கு இடம் கொடுக்கவில்லை. இவருக்கு ஆண்டவரைப் பற்றி கூறவும், திருமுழுக்குப் பெறவும் அழைத்தபோது, உடனே ஒத்துக்கொள்ளாமல் தனக்கு 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேளாததால் அவருக்காக ஊக்கமாய் ஜெபித்துவிட்டு அந்த ஊழியர் கடந்து சென்றார். ஆனால் இரண்டாவது நாளில் மாரடைப்பினால் அவர் மரித்துப்போனார். அந்தோ பரிதாபம்! அவருடைய வாழ்க்கையில் அந்த 15 நாட்கள் கிடைக்கவே இல்லை.
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய பாவத்தைச் சுட்டிக்காட்டும் போது, காலதாமதம் செய்யாமல் பாவமன்னிப்பைப் பெறவேண்டியது மிக மிக அவசியம். நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
- T. பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் சங்கிலிதொடர் ஜெபம் செய்யப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864