By Village Missionary Movement
Tuesday, 13-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 13.01.2026
சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்
“ஞானவான்கள்... நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்." - தானியேல் 12:3
இந்தியா தனக்கு ஏற்ற நாடல்ல. அமெரிக்காவும், செல்வந்தருடன் திருமணமும் தான் என் வாழ்வுக்கு சிறப்பைத் தரும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த "ஐடா ஸ்கடர்" அவர்கள், ஒரு நாள் புதிய தீர்மானம் ஒன்றை இந்திய நாட்டு மக்களுக்காக எடுத்தார். இந்தியர்களுக்காக மருத்துவராவேன் என்பதே அந்த தீர்மானம்! இதன் மூலம் அவரின் அன்பான சேவையை பாராட்டி, வேலூர் மக்கள் மிகவும் பாசத்துடன் டாக்டர். ஐடா ஸ்கடரை, "ஐடா அத்தை" என அழைத்தனர். 1900 ஆம் ஆண்டு ஐடா அவர்களின் தந்தை மரணம் அடைந்தபின், மருத்துவப் பணியின் முழு பொறுப்பையும் அவர் ஏற்று செயல்பட்டார். ஷெல் மருத்துவமனையை நிறுவி, இலவச மருத்துவப் பணியாற்றினார். தாதியர்களுக்கு முதல் பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். 1918 ஆம் ஆண்டு "பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி" யை ஆரம்பித்தார். 1945 ஆண்டு முதல் ஆண்களும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். 1952 ஆம் ஆண்டு உலகின் சிறந்த ஐந்து மருத்துவர்களில் ஒருவராக டாக்டர். ஐடா ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் பரவிய காலரா, தொழுநோய், பிளேக் நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றினார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவே பணியாற்றி, 1960 ஆம் வருடம் தனது 90 வது வயதில் தனது வாழ்க்கை பயணத்தை முடித்தாலும், அவரின் புகழ் சதா காலங்களிலும் பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறது.
முதல் நூற்றாண்டிலேயே அப்போஸ்தலர்கள் காலத்தில் நட்சத்திரமாய் திகழ்ந்தவர் பர்னபா. அப்போஸ்தலர் 4:34-37 வரை உள்ள வசனங்களில் அப்போஸ்தலராலே, "ஆறுதலின் மகன்" என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவர், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார். பவுலாய் மாறிய சவுல் தான் சீஷர் கூட்டத்தோடு சேர ஆசைப்பட்டார். ஆனால் அவரை நம்பாமல், அவரை சேர்த்துக்கொள்ள சீஷர்கள் பயப்பட்டபோது, பர்னபா சேர்த்துக் கொண்டு, அப்போஸ்தலரிடத்திற்கு பவுலை அழைத்துக் கொண்டு வந்தவர் பர்னபா. பவுலோடு இணைந்து பணியாற்றி, பவுலை வளர்த்து விட்ட ஆசானாக இருந்தவர். பர்னபாவை "யூப்பித்தர்" என்றும், பவுலை "மெர்க்கூரி" என்றும் சொன்னார்கள். அப்போஸ்தலராகிய பர்னபாவும், பவுலும் சேர்ந்து பணியாற்றிய காலங்களில் முதன்மை ஸ்தானம் பர்னபாவுக்கே இருந்தது. பவுல் மாற்குவை வேண்டாம் என்ற போது, மாற்குவை பவுலுக்கு ஏற்ற ஊழியனாக உருவாக்கி கொடுத்தார் பர்னபா! இப்படி பர்னபாவைப் போன்று, டாக்டர். ஐடா ஸ்கடரைப் போன்று வாழ்ந்தவர்களும், ஞானவான்களும் நட்சத்திரத்தைப் போல சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். ஆமென்.
- Rev.D. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
பணித்தளங்களில் மிஷனெரி வீடுகளின் கட்டுமான பணிக்கான
ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864