By Village Missionary Movement
Thursday, 25-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 25.12.2025 (Happy Christmas)
வெளிப்படுத்தும் தேவன்
"ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது... வெளியரங்கமாக்கப்பட்டதும்.... அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான, இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சுவிசேஷம்...” – ரோமர் 25,26
இயேசு என்ற பெயர் அவருடைய பெற்றோரைத் தவிர வேறுயாருக்கும் ஆதிகாலமுதல் வெளிப்படுத்தப்படவில்லை (மத்.1: 21) இயேசுவின் பிறப்பையொட்டி சம்பந்தப்பட்ட சிலர் உண்டு. இவர்களுக்குத் தேவன் எப்படித் தன்னை வெளிப்படுத்தினார்? பார்ப்போம்.
இயேசு என்ற வார்த்தை முதன் முதலில் தன்னிடம் விதைக்கப்பட்ட போது மரியாள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதினால் வார்த்தை மாம்சமாகி இயேசுவாக வெளிப்பட்டார் (லூக்கா1:38), குழம்பிய நிலையிலிருந்த யோசேப்புக்கு இயேசு என்ற வார்த்தை வெளிப்பட்டிருந்தாலும்கூட, "இம்மானுவேல்" என்ற நாமம் கேட்டபோதுதான் குழப்பம் நீங்கி தன் மனைவியை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டார் (மத்.1:21-25) மரியாளின் வாழ்த்துதலில் வெளிப்பட்ட தீர்க்கதரிசன வல்லமை எலிசபெத்தையும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையையும் தொடவே, இயற்கைக்கு மாறாக குழந்தை துள்ளுவதை உணர்ந்த எலிசபெத்து, பரிசுத்த ஆலியினால் நிறைந்து, இயேசுவைத் தன் ஆண்டவராகக் கண்டாள் (லூக்.1:39-45), சகரியாவின் நாவு கட்டவிழ்க்கப்பட்டு கர்த்தரைத் துதித்த போது. தீர்க்சதரிசனத்தினால் கர்த்தர் தம்மை சகரியாவுக்கு இரட்சண்யக் கொம்பாகவும் (சகரியா 3:8), உன்னதமானவராகவும், உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமாகவும் வெளிப்படுத்தினார் (லூக்கா 1:75-79). கர்த்தர் சிமியோனுக்குத் தம்மை இஸ்ரவேலின் தேவனுடைய இரட்சண்யமாகவும் ஆறுதலாகவும், கர்த்தருடைய கிறிஸ்துவாகவும், வெளிப்படுத்தினார். தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவு பகலாக உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்த அன்னாளுக்கு தேவன் தம்மை மீட்பராக வெளிப்படுத்தினார்.
இப்படியாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக தம்மை வெளிப்படுத்திய
கர்த்தர் இரட்சகர் மீட்பர் என்று அர்த்தப்படும்படி கிறிஸ்துமஸ் நன்னாளில் இம்மானுவேலராக வெளிப்பட்டார். இதைப்போலவே கர்த்தராகிய இயேசு இக்கடைசி காலத்திலும் நமக்குள்ளும், நம் வாழ்விலும் வெளிப்பட்டு செயல்பட விரும்புகிறார். எந்தப் பெயரில் அவர் நமக்குள் வெளிப்பட்டாலும், அப்பெயரின் வல்லமை அதை அனுப்பின நோக்கத்தை அவர் நம்மிடத்தில் வாய்க்கும்படி செய்யும். அதன்படியே, மரியாள் இயேசுவைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள்; யோசேப்பு இயேசுவைத் தன் மடியில் வளர்த்தார்; சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்தினார்.
பிரியமானவர்களே! இவர்களைப் போலவே நாமும், நம்மை சந்திக்கும் தேவன் நம்மிடம் சொல்லும் "உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு" (ஆமோஸ் 4:12) என்னும் எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டு, நம் இதயத்தைத் திறந்து, இயேசுவை இரட்சகராக மட்டுமல்ல, நம் வாழ்வின் சகலத்தையும் ஆளும் இராஜாவாக ஏற்றுக் கொள்வோமா?
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
நமது வளாகத்தில் நடைபெறும் நற்செய்தி பெருவிழாவில் தேவ ஆளுகை இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864