By Village Missionary Movement
Saturday, 20-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 20.12.2025
அர்த்தமுள்ள பண்டிகை
"அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள் ... " - லூக்கா 1:38
நான் அருப்புக்கோட்டை C.S.I ஆலயத்தில் போதகராகப் பணி செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் ஒரு அம்மா என்னிடத்தில் வந்து ஐயா, எனது மகன் சாமுவேலுக்கு இன்று பிறந்தநாள். மாலை 6 மணிக்கு ஜெபிக்க வாருங்கள் என்று அழைத்தார்கள். நானும் மாலை 6 மணிக்கு அந்த வீட்டிற்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். வீடு முழுவதும் மிக அழகாக அலங்காரம் செய்து வைத்திருந்தனர். நிறைய உறவினர்களும் வந்திருந்தார்கள். வீட்டிற்குள் நுழையும் போதே பிரியாணி மணம் வந்தது. பிறந்தநாள் கேக் எல்லாம் இருந்தது. சாமுவேலின் அம்மா என்னிடம் ஜெபியுங்கள் ஐயா என்றார்கள். நான் அந்த அம்மாவிடம் பிறந்தநாள் கொண்டாடுகிற சாமுவேல் எங்கே? கூப்பிடுங்கள் என்றேன். அதற்கு அந்த அம்மா ஐயா, சாமுவேல் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதால் அவன் இப்பொழுது வரவில்லை ஐயா என்று சொன்னார்கள். இதுபோலத்தான் நாமும் கிறிஸ்து பிறப்புப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். புதிய ஆடை, வீடு அலங்கரிப்பு, நல்ல உணவு. ஆனால் பிறந்தநாள் கொண்டாடுகிற இயேசு கிறிஸ்து மட்டும் இருப்பதில்லை. நாம் கொண்டாடுகிற கிறிஸ்து பிறப்பு பண்டிகை அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்புப் பண்டிகையாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு அர்த்தமுள்ள அர்ப்பணிப்பு தேவை.
மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி மரியாள் நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று தன்னை ஒப்புக் கொடுத்ததால்தான், நாம் இன்று கிறிஸ்து பிறப்புப் பண்டிகை கொண்டாடுகிறோம். மரியாள் ஒப்புக் கொடுத்ததைப் போல நாம் ஆண்டவருக்கு அடிமையாய் இருக்கிறோமா? அடிமை என்றால் நூற்றுக்கு நூறு கீழ்ப்படிதல், மரியாளின் கீழ்ப்படிதல், உம்முடைய வார்த்தையின்படி ஆகக் கடவது என்ற வார்த்தையினால் விளங்குகிறது.
மரியாள் உள்ளத்திலும் பெரிய போராட்டம் தான். திருமணம் ஆகாத பெண் கர்ப்பவதியாகி பிள்ளை பெறுவாள் என்றால், யார் தான் சம்மதிக்க முடியும். ஆனால் மரியாளின் உள்ளத்தில் இது எப்படி ஆகும் என்ற கேள்வி இருந்தாலும், தேவ தூதனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை முழுவதுமாய் ஆண்டவருக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்தாள். உம்முடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று தன்னைத் தாழ்த்துகிறாள். எனவே நாமும் தாழ்மையை அணிந்து கொள்வோம். இயேசு பிதாவானவரிடத்தில் உயர்த்தப்பட்டது போல் நாமும் உயர்த்தப்படுவோம்.
- Rev. ஜோதி நாயகம்
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் அநேக வாலிபர்கள் தன்னார்வமாய் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864