By Village Missionary Movement
Friday, 19-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 19.12.2025
பரிசுப் பெட்டி
"...மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” - லூக்கா 15:20
ஒரு சிறுமி தன் தந்தைக்கு கிறிஸ்துமஸுக்கு பரிசு கொடுக்க விரும்பினாள். பலவாறு யோசித்து ஒரு முடிவிற்கு வந்தவளாய் ஒரு சிறிய பெட்டியை கொடுத்தாள். அதற்குள் எதுவும் இல்லாததைக் கண்ட தந்தை இது என்ன வெறும் காலியான பெட்டி என்றார் சற்று எரிச்சலுடன்! சிறுமி புன்னகையுடன் அப்பா, அதற்குள் நான் நிறைய முத்தங்களும், அன்பும் நிரப்பி உங்களுக்குத் தந்தேன் என்றாள். அவள் சொல்லி முடிக்கும் முன் தந்தையின் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. ஆம், அந்த பெட்டி அந்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஞாபகமாக இருந்தது. இன்றும் தேவனிடம் நம்முடைய எதிர்பார்ப்புகள், அந்த தந்தையை போன்று, 'பெட்டி நிறைய பரிசுகள்' போன்று இருக்கின்றது. ஆனால் தேவனோ தம் அன்பினால், நேசத்தால் நம்மிடம் வருகிறார். தேவனின் அன்பை உணர்ந்து அவரை நேசிக்கிறோமா? இல்லை அவர் எனக்கு ஏதும் தரவில்லை என்று புலம்புகிறோமா? தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32).
தகப்பனை விட்டு பிரிந்து சென்று, துன்மார்க்கமாய் வாழ்ந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த இளைய குமாரனின் உவமையை அறிவோம். அதில் தன் தம்பி திரும்பி வந்த போது அண்ணன் வீட்டிற்குள் வர விருப்பமின்றி வாசலிலேயே நின்றது போல நாமும் நின்று கொண்டிருக்கிறோமா? அப்படியென்றால் அந்த தகப்பனைப் போல, நம் பரம தகப்பனும் நம்மிடம் சொல்லுகிறார், "என்னுடையது எல்லாம் உன்னுடையது என்று!" ஆம், எல்லாவற்றையும் நமக்கு தந்து விட்டார். எனக்கு அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை வருடத்திற்கு ஒரு நாள் நாம் கொண்டாடுவது மாத்திரம் கிறிஸ்துமஸ் அல்ல. அவரின் அன்பை நம் வாழ்நாளெல்லாம் வெளிப்படுத்துவதே உண்மையான கிறிஸ்துமஸ். அன்பு இல்லாத கிறிஸ்துமஸ் ஒளியில்லாத விளக்கை பேன்றது. கிறிஸ்துவின் அன்பில்லாத கிறிஸ்தவனின் நிலையும் அதுவே!
புத்தாடைகள், பரிசுகள், பட்டாசுகள், அலங்காரம், கொண்டாட்டங்களில் மாத்திரமல்ல, உன்னிடத்தில் அன்புகூருவது போல் பிறரிடத்திலும் அன்பு கூருவாயாக என்ற கட்டளைக்கு கீழ்ப்படிவதே அவருக்கு பிரியம். உங்களிலும் எளியவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பு, சிறு புன்னகை, உதவி அவர்களையும் மகிழ்ச்சியூட்டும். உங்கள் அன்பையும் பரிசையும் இக்கிறிஸ்துமஸ் நாட்களில் வழங்குங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்.
- R. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் அநேக திருச்சபைகள் நம்மோடு இணைந்து செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864