By Village Missionary Movement
Thursday, 11-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 11.12.2025
இரட்சகர்
"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்
என்றான்" - மத். 1:21
ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து பிறந்ததினாலே கிறிஸ்துமஸ் என்ற மனமகிழ்ச்சியான நாள் உண்டானது. இயேசு இவ்வுலகிற்கு எதற்காக வந்தார்? "தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க வந்தார். வியாதியில் மனுஷன் மரிப்பதை விட பாவத்தில் மரிப்பவர்களே அதிகமாக உள்ளார்கள். வியாதி வந்தால் மாத்திரை மருந்தை கொண்டு அவர்களை காப்பாற்றிவிடலாம். பாவம் என்ற வியாதிக்கு மருந்தே கிடையாது. ஆனால் ஒருவரிடம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்து காப்பாற்ற மருந்து உண்டு. அந்த மருத்துவர் யார் என்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே.
அப்படியானால் பாவம் அவ்வளவு மோசமானதா? ஆம்! வேதம் சொல்கிறது "பாவத்தின் சம்பளம் மரணம்". என்ன வேலை செய்தாலும் சம்பளம் பணம் கிடைக்கும். ஆனால் பாவம் என்ற வேலையில் ஈடுபடுவோர்க்கு கிடைக்கும் சம்பளம் மரணம். "பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்" (எசேக்.18:20). சில சமயங்களில் பாவமே சரீரத்தில் வியாதிகளை கொண்டு வருகிறது. பாவமே மனுஷருக்கு சாபங்களை விளைவிக்கிறது. சாபங்கள் குடும்பங்களை அழித்து நிர்மூலப்படுத்துகிறது. இன்னும் ஒரு படி மேலாக சொல்ல வேண்டுமானால் நம்மை ஆசீர்வதிக்கிற, பாதுகாக்கிற தேவனை விட்டு தூரப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை பெறமுடியாமல் தடுத்து நிறுத்துகிறது. ஏசா. 59:2 " ... உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது."
இந்த செய்தியை வாசிக்கிற நீங்கள் யாராக இருந்தாலும் இயேசுவை அறிந்தவர்களோ அறியாதவர்களோ பாவம் செய்யும் கொடுமை மிக மோசமான ஒன்று. ஆதலால் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித ரூபத்தில் "இயேசுகிறிஸ்து" என்ற பெயருடன் இந்த பூமியில் உதித்தார். அப்படி அவர் மனித உருவத்தில் வெளிப்பட்டதின் நோக்கம், பாவத்தினால் உண்டாகும் சகல அழிவிலிருந்தும், தாம் உண்டாக்கின ஒவ்வொருவரையும் காப்பாற்றுவதற்கே! பாவத்திலிருந்து விடுதலையளிக்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
அருமையான மக்களே! இயேசுவை ஏற்றுக் கொண்ட நாம், அவரை அறியாத மக்கள் மத்தியில் போய் இயேசுவே நம்மை பாவத்திலிருந்து காப்பாற்ற வந்த தெய்வம். பாவம் மிக மோசமானது என்று சொல்லி, அவர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் என்ற நாளை சந்தோஷத்துடன் கொண்டாடுவோம். இதுவே உண்மையான கிறிஸ்துமஸ்.
ஆமென்! அல்லேலூயா!
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை அநேக இடங்களில் ஒழுங்குபடுத்துகிற தன்னார்வலர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864