By Village Missionary Movement
Monday, 08-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 08.12.2025
ஒரு மனிதனைத் தேடி ..
"உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" - யோவான் 1:19
C.T ஸ்டட் என்ற புகழ் பெற்ற கிரிக்கெட் வீரருக்கு ஆஸ்திகள் ஏராளம். அவர் D.L. மூடி அவர்களின் பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். ஸ்டட், தான் முதன்மையான கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று தான் விருப்பம் கொண்டிருந்தார். தனது சகோதரன் வியாதிப்படுக்கையில் இருந்த போது, ஸ்டட்டின் மனதில் "நித்தியத்தை சந்திக்க நேரிடும் போது இவ்வுலகில் நான் பெற்ற புகழ், பெயர் எல்லாமே வெறுமையே" என்பதை உணர்ந்தார். கிறிஸ்துவுக்காக ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டார். இங்கிலாந்தில் மாணவர் மத்தியில் எழுப்புதல் உண்டாகக் காரணமானார், சீனாவிலும், இந்தியாவிலும் மிஷனெரியாகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கூட்டங்களை நடத்தி, ஆயிரக்கணக்கானோரை ஆண்டவரின் பணிக்கு அர்ப்பணிக்க செய்தார். இறுதியாக ஆப்பிரிக்காவிற்கு சென்று இரட்சகர் இயேசுவை அறிவித்து, அவர்களை ஒளியின் பிள்ளைகளாக மாற்றினார்.
இன்றைய நாளின் வேதபகுதியில் சகேயு என்ற மனிதரைக் குறித்து நாம் தியானிக்கின்றோம். சகேயு என்றாலே நம் நினைவுக்கு வருவது குள்ளமானவன்,ஆயக்காரன், பாவியான மனுஷன் என்பது தான். ஆனால் இந்த ஒரு மனிதனின் அரிப்பணிப்பு, மனமாற்றம் அவர் வீட்டிற்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தது. ஆபிரகாம் என்ற மனிதனின் அர்ப்பணிப்பு, சந்ததியை பெருக்கத்திற்குள்ளாக நடத்தியது. மோசேயின் அர்ப்பணிப்பின் மூலம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இலட்சக்கணக்கான ஜனங்கள் மீட்டெடுக்கப்பட்டனர். நோவா, நீதிமானாய் வாழ்ந்ததினாலே தன் வீட்டாரனைவரோடும் கூட பேழையில் பாதுகாக்கப்பட்டார். கொர்நேலியுவின் பக்தி, ஜெபம், தானதர்மங்கள் வீட்டாரனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டு வந்து அவர்களை விடுவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக பிந்தின ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுகிறோம். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய சித்தமாய் இருக்கிறது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! "ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது" என்று பிர.7:8 ல் நாம் வாசிக்கிறோம். நீங்களும், நானும் ஆசீர்வாதத்திற்கு காரணமாய் இருக்கிறோமா? அல்லது தடைக்கல்லாய் இருக்கிறோமா? என்று சிந்திப்போம். சந்ததி சந்ததியாக ஆசீர்வாதங்களைக் கொண்டு செல்ல, ஒரு மனிதனின் இருதயம் திறக்கப்பட்டால் போதும். தேவன் அப்படிப்பட்ட மனிதனை தான் தேடிக் கொண்டே இருக்கிறார். இதை வாசிக்கின்ற நீங்கள் தேவன் தேடுகிற அந்த ஒரு மனிதனாக ஏன் இருக்கக் கூடாது? உங்கள் ஒருவரின் அரிப்பணிப்பு உங்கள் குடும்பத்தில்,சமுதாயத்தில், தேசத்தில் தேவனுடைய வல்லமை பலமாய் வெளிப்பட காரணமாக அமையலாமே! நீங்கள் அவரது கரத்தின் கருவியாக செயல்பட முன்வருவீர்களா?
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு :-
அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்க்கு எனது பங்களிப்பைத் தர தீர்மானிக்கும் நேரத்தில் அநேகர் நல்ல தீர்மானம் எடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864