By Village Missionary Movement
Saturday, 06-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 06.12.2025
நெருப்பு
"நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்... " - யாக்கோபு 3:6
நரம்பில்லா நாக்கு செய்யும் செயலைக் கண்ட பற்கள் நாக்கினைப் பார்த்து, நாங்கள் மொத்தம் 32 பேர். அனைவரும் சேர்ந்து உன்னை இறுக்கி அழுத்தினால் நீ காலியாகி விடுவாய் என்றதாம். உடனே சற்றும் யோசிக்காமல் நாக்கு சிரித்துக் கொண்டே, நான் தனிமையானவன் தான். ஆனால் நான் ஒரு வார்த்தை மாற்றி பேசினால் போதும் நீங்கள் 32 பேரும் காலியாகிவிடுவீர்கள் என்றதாம். அநேக குழப்பங்கள், சண்டைகளுக்குக் காரணம் நம் நாவின் வார்த்தைகள் தான்.
ஆம், நம் வார்த்தைகளால் ஒருவரை உற்சாகப்படுத்தி தொடர்ந்து செயல்பட வைக்கவும் முடியும். அதே வார்த்தைகளால் நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை காயப்படுத்தி, செயல்படாமல் சோர்ந்து போகச் செய்யவும் முடியும். ஏன் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓட வைக்கவும் முடியும். தேவையில்லாத வீண் வார்த்தைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கவும் முடியும். பெருமையான வார்த்தைகளை பேசி நம்மை தேவனுக்கு விரோதமாக்கவும் முடியும். இந்த நாவு தேவ அன்பை பிறருக்குச் சொல்லவும் முடியும். நம் வார்த்தைகள் எப்படி இருக்கிறது என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம் இருதயத்தின் நிறைவை வாய் பேசும். நம் இருதயம் தேவையற்ற கசப்பு, பெருமை இவற்றால் நிரம்பியிருந்தால், நம் நாவும் அவற்றையே பேசும். நம் சரீரம் முழுவதும் கெட்டு விடும்.
நாவும் நெருப்பு தான், சிறிய நெருப்பு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது என வேதம் கூறுகிறது. நம் நாவின் வார்த்தைகள் நம் சரீரத்தையும் கெடுத்து பிறரின் வாழ்வையும் கெடுத்து விடுகிறது. ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறது, நரக அக்கினியில் தள்ளி விடுகிறது. நம் சரீரத்தின் சிறு அவயவமான நாக்கை குறித்து கவனமாயிருக்க வேண்டும். ஆனால் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் கிருபை பொருந்தியதாக இருந்தது. இதனைக் குறித்து அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். அநேகர் அவரைத் தேடி வந்து விடுதலை பெற்று தேவனை மகிமைப் படுத்தினார்கள்.
இதை வாசிக்கும் அன்பரே, நம் நாவை தேவதுணையோடு அடக்கி, ஞானமாய் பயன்படுத்தி, நம் சரீரத்தை நரக ஆக்கினையினின்று மீட்டுக் கொள்வோம். நம் இருதயத்தைக் காத்துக் கொண்டால் நாவை அடக்கமுடியும்.சாலொமோன் ஞானி, "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்; அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்" என்கிறார். நாவை அடக்குவோம். ஜீவனைக் காத்துக் கொள்வோம்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் நற்செய்தி பெருவிழா நிகழ்ச்சியைத் தாங்குகிறவர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864