By Village Missionary Movement
Wednesday, 09-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 09-06-2021
முடியுமா? முடியும்.
“… உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;…” - மத்தேயு 5:44
ஒரு பிரசித்தி பெற்ற ஊழியர் அடிக்கடி கல்கத்தாவிற்கு ஊழியத்திற்குச் செல்வார். இரயிலிலிருந்து இறங்கியதும் ஆட்டோ மற்றும் டாக்சிக்காரர்கள் வந்து எங்கு செல்ல வேண்டுமென்று மொய்த்து எடுப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிச்சைக்காரர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். அதனால் இவ்விரு கூட்டத்தாரையும் பார்த்தாலே இவருக்கு பதட்டம் வந்துவிடும்.
ஒருமுறை அவர் வழக்கம்போல இரயிலிலிருந்து இறங்கினவுடனே டாக்சிக்காரர் வந்து எங்கு செல்ல வேண்டுமென கைப்பையைப் பிடித்துக்கொண்டார். அவரோ கோபத்தில் தட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தார். சில அடிகள்தான் நடந்திருப்பார். கால் இடறி கீழே விழுந்து நாடியில் அடிபட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது, உடையெல்லாம் இரத்தமாகிப் போனது. ஒரு சிறுவன் எங்கிருந்தோ ஓடிவந்து, தன்னுடைய பாட்டிலிலுள்ள தண்ணீரைக் கொடுத்து காயங்களைக் கழுவிக் கொள்ளும்படி கூறினான். அவர் காயத்தையும், உடைகளையும் கழுவிய பின்பு தான் பார்த்தார் அவன் ஒரு பிச்சைக்கார சிறுவன் என்று! ஊழியருக்குத் தர்மசங்கடமாகிப் போனது. வேண்டாமென்று சொன்ன டாக்சிக்காரரும் ஓடி வந்து அவரைத் தூக்கி இரத்தத்தையெல்லாம் துடைத்துவிட்டு, அவர் கைப்பையை வாங்கிக்கொண்டு தன் டாக்சியில் ஏற்றிக்கொண்டார். சேருமிடத்தை அடைவதற்குள் “என்ன சார் அதிகம் வலிக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். அவர் மனைவிகூட இத்தனை முறை கேட்டிருக்கமாட்டார்கள். ஊர், பெயர் அறியாத இவர் இவ்வளவாய் விசாரிக்கிறாரே என்று நினைத்து ஊழியரின் கண்களில் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. அன்றிலிருந்து ஊழியர் கல்கத்தா ஆட்டோ, டாக்சிக்காரர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்காக எந்த நாளும் ஜெபிக்க மறப்பதில்லை.
இதை வாசிக்கின்ற தேவப்பிள்ளைகளே! நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஊழியர்களானால் ஊழியப்பாதையிலும் நாம் சிலரைக் குறித்து கசப்பான, வெறுப்பான எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பார்வையில் அது நியாயமே என்று கூடத் தோன்றலாம். ஆனால் அன்பின் ஊற்றாகிய தேவன், “உன்னிடத்தில் அன்புகூருவதைப்போல உன் சகோதரனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று தேவன் கொடுத்த கட்டளையில் நீங்களும், நானும் வெறுக்கிற நபர்களும் அடங்குவார்கள் என்று யோசித்துப் பார்த்ததுண்டா?
வேதத்திலே அபிமெலேக்கு ஈசாக்கையும், அவன் குடும்பத்தையும், அவன் மனிதர்களையும், ஆடுமாடுகளையும் தங்களுடைய இடத்தை விட்டே போய் விடும்படி விரட்டியடித்த போதிலும் (ஆதி.26:16) அபிமெலேக்கும் அவன் மந்திரிகளும் மறுபடியும் ஈசாக்கினிடத்திற்குச் சென்றபோது விருந்து செய்தான் (ஆதி.26:30) என்று வாசிக்கிறோம். ஈசாக்கு தன்னை விரட்டியடித்தவர்களுக்கே விருந்து செய்யும்போது, நம்மைக் கஷ்டப்படுத்தியவர்களை, கடினமாய்ப் பேசியவர்களை, கண்ணீர் வடிக்கக் காரணமாயிருந்தவர்களை நாமும் மன்னித்து ஏற்றுக்கொள்ளலாமே. “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைத் துன்பப்படுத்தினவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லினாலும் செயலினாலும் வாழ்ந்து காட்டிய பரம தகப்பனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவோம். அவரைப் போல அநேகரை ஆதாயம் செய்வோம்.
- L. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
நமது முழுநேர மிஷனெரிகள் ஒவ்வொருவரையும் தேவன் பாதுகாத்து, போஷித்து, அற்புதமாய் வழிநடத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250