By Village Missionary Movement
Thursday, 04-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 04.12.2025
ஞானமாய் செயல்பட வேண்டும்
“மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.” - நீதி. 26:5
ஸ்வப்னபுரி என்ற கிராமத்தில் ஒரு பொல்லாத நல்ல பாம்பு வசித்து வந்தது. அது மக்களை கடித்து துன்புறுத்தி வந்தது. ஆகவே கிராமத்தினர் ஒன்று கூடி அந்த ஊரிலிருந்த சாதுவிடம் சென்று அந்த பாம்பிற்கு புத்தி சொல்லுங்கள், எங்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறது என்றார்கள். சாது அந்த நல்ல பாம்பிடம் நீ செய்வது சரியல்ல, இனி நீ யாரையுமே கடிக்கக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்.
வாரம் கழிந்தது, பாம்பு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சாதுவிடம் வந்தது. ஏன் நீ இப்படி இருக்கிறாய் ? என்று பாம்புவிடம் கேட்டார். இந்த ஜனங்கள் என்னை கல்லை விட்டு எறிகிறார்கள். பிள்ளைகள் என் வாலைப் பிடித்து அங்கும் இங்குமாக இழுக்கிறார்கள். நான் இப்பொழுது மிகவும் சிரமத்துக்குள்ளாகிப் போனேன் என்றது. அடப்பாவமே உன்னை கடிக்கக்கூடாது என்று தானே சொன்னேன். சீரவும் கூடாது என்றா சொன்னேன் என்றார் சாது. அந்த நாள் தொடங்கி பாம்பு தம்மிடம் யார் நெருங்கினாலும் சீற ஆரம்பித்தது. ஒருவர் கூட அந்த பாம்பிடம் நெருங்கவில்லை. நாம் புறாவைப் போல கபடற்றவர்களாகவும் பாம்பை போல புத்தியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.
நீதி. 26:4,5 வசனங்களில் ஞானி சாலொமோன்,” மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்” என்று சொல்கிறார். “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்”. இங்கே பார்த்தால் இரண்டு வசனங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் எழுதப்பட்டிருக்கிறது. இதனுடைய அர்த்தம் அவன் பேசுகிறது போல வார்த்தைகளை பயன்படுத்தாதே. நீ உன் பேச்சுப்படி அவனுக்கு புத்தி புகட்ட வேண்டும். அப்பொழுதுதான் அவன் தனது தவறை உணர முடியும்.
நாம் இரட்சிக்கப்படாத மக்களைப் போல பதிலளிக்காமல், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற வழிகாட்டுதலின் படி அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அப்பொழுது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, திருத்திக் கொள்வார்கள். பாம்பு கடிக்க வில்லை என்றவுடன் அனைவரும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் சீற ஆரம்பித்தவுடன் அதை விட்டு விலகி போனார்கள். நாமும் எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும் நடக்க வேண்டும் என்று ஞானமாய் நடந்து கொள்ளுவோம். ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!
- Rev. S. A. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் நற்செய்தி பெருவிழா மூலம் அநேக மக்கள் அற்புதத்தை, தேவன் தொடுதலை பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864