By Village Missionary Movement
Thursday, 27-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 27.11.2025
வாழ்ந்திரு வீழ்ந்து போகாதே
"...உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்" - நெகேமியா 9:25
ஒரு நகரத்தில் பெரிய செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய ஒரே மகனை அன்புடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தார். அந்த நகரத்திலேயே அவர் தான் பெரிய செல்வந்தராக இருந்ததினால் அவருக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அந்த மகன் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும், தவறான நண்பர்களுடன் இணைந்து ஆரம்பத்தில் சிறுசிறு தவறுகளை செய்ய ஆரம்பித்தவன், பின்னாளில் தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லையென்று நினைத்து ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்தான். ஒரு நாள் நண்பர்களின் தூண்டுதலின்படி, குடித்துவிட்டு தன் தகப்பனிடம் சண்டையிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, அவனுக்கு மதுவை குடிக்கக் கொடுத்தார்கள். சிறிது நேரத்தில் அவன் மயக்கமடைந்தான். அவனது நண்பர்கள் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். போதை தெளிந்து பார்த்தபோது அவனது நண்பர்களும் இல்லை, அவனது பணமும் இல்லை. திகைத்துப்போன அவன் புலம்பினான் ஆனால் ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. எனவே பிழைப்பதற்கு வேலைத் தேடி அலைந்தான், ஒரு வேலையும் கிடைக்கவில்லை. மிகவும் சோர்ந்து போன அவன் பிச்சை எடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டான்.
வேதாகமத்தில், லூக்கா 15:11-32 ல் இதே போன்று ஒரு நபரை பார்க்கிறோம். அவன் தான் இளையக்குமாரன். அவன் தன் தகப்பனிடம், ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை தர வேண்டும் என கேட்டான். சில நாளைக்குப் பின்பு எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூரதேசத்துக்குப் போய் அங்கே துன்மார்க்கமாய் வாழ்ந்து, ஆஸ்தியையெல்லாம் அழித்துப் போட்டான். எல்லாவற்றையும் செலவழித்தப்பின் அந்த தேசத்தில் ஒருவனிடத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அந்த முதலாளியோ அவனுக்கு பன்றிகளை மேய்க்கும் வேலைகளைக் கொடுத்தார். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப நினைத்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. இறுதியில் தன் தகப்பனிடமே வருகிறான். தகப்பனும் அவனை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.
இதை வாசிக்கின்ற சகோதர, சகோதரிகளே! வசதி வந்தவுடன் பெருமை வந்துவிடக் கூடாது. அப்போஸ்தலனாகிய பவுலைப் போல வாழ்ந்திருக்கவும், தாழ்ந்திருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இளையக்குமாரனைப் போல் ஊதாரித்தனமாக இருக்கக்கூடாது. நெகேமியா 9:25 ன் படி, அவருடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள். நாமும் அவருடைய தயையினால் செல்வமாய் வாழ்கிறோம்! வீழ்ந்து போகாமல் இருப்போம்!
- T. ஜெபராஜ்
ஜெபக்குறிப்பு:-
50,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் செல்லும் கிராமங்களில் தேவன் திறந்த வாசலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864