By Village Missionary Movement
Wednesday, 26-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 26.11.2025
திக்கற்றவர்களுக்கு உதவிடும் தேவன்
"...நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு
உதவிசெய்யவேண்டும் என்றான்" - மாற்கு 9:22
ஒரு மருத்துவமனைக்குள் சிறுவன் ஒருவன் அழுதுகொண்டு ஓடி வந்து, தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்றான். அவனுடைய அழுகுரலை கேட்டு தன் அறையை விட்டு வெளியே வந்த மருத்துவர், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? என கேட்டார். அதற்கு அவன் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என் தகப்பனாரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றான். அந்த மருத்துவர் உன் தகப்பனாரை அழைத்து வா என்றார். அதற்கு அச்சிறுவன் ஐயா, அவரை அழைத்து வர இயலாது, அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றான். மருத்துவர் அந்த சிறுவனிடம், அப்படியானால் ஆண்டவர் தான் உன் தகப்பனை காப்பாற்ற முடியும். நீ அருகில் இருக்கும் தேவாலயத்துக்கு போய் ஜெபி, இயேசு உன் தகப்பனை குணமாக்குவார் என்று கூறினார்.
உடனே அந்த சிறுவன் தேவாலயத்துக்குச் சென்று, "இயேசப்பா, என் தகப்பனை அனைவரும் கை விட்டு விட்டனர். நீர் தயவு கூர்ந்து என் தகப்பனை குணமாக்கும்" என்று கண்ணீரோடு ஜெபித்தான். பின்பு வீட்டிற்குச் சென்று பார்த்த போது படுக்கையில் அவனுடைய தகப்பனை காணவில்லை. அவன் பயத்தோடு அப்பா, எங்கே இருக்கிறீர்கள் என கூப்பிட்டான். அவர் மகனே, சமையல் அறையில் உனக்கு பழரசம் தயாரித்து கொண்டிருக்கிறேன் என்றார். அவன் மகிழ்ச்சியோடு ஓடி சென்று தன் தகப்பனை அணைத்துக் கொண்டு அப்பா, எப்படி உங்களுக்கு சுகம் கிடைத்தது? என்று கேட்டான். அதற்கு அவர் சற்று முன் கனிவும், அமைதியுமான தோற்றம் உடைய ஒருவர் வந்து எனக்காக ஜெபம் செய்தார். அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டதற்கு, "நான் தான் இயேசு கிறிஸ்து, உங்கள் மகன் தான் உங்களுக்கு சுகம் இல்லை என்று உங்களை சுகப்படுத்தும் படி என்னிடம் கேட்டான்" என்று கூறினார். பின்பு தகப்பனும், மகனும் முழங்காற்படியிட்டு ஆண்டவருக்கு கண்ணீரோடு நன்றி கூறினார்கள்.
மாற்கு 9 ம் அதிகாரத்தில், ஊமையான ஒரு ஆவி பிடித்த மகனை சுகப்படுத்தும்படி, தகப்பன் அவனை சீஷர்களிடம் அழைத்து வந்தார். ஆனால் அவர்களால் அதைத் துரத்த கூடாமற்போயிற்று. அந்த தகப்பன் இயேசு கிறிஸ்துவிடம் தன் மகனை சுகப்படுத்தும்படி கேட்டார். இயேசு கிறிஸ்து அவனிடம், "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" என்றார். அவனுடைய தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கேட்டான். ஆண்டவரும் அந்த மகனை சுகப்படுத்தினார்.
அன்பான சகோதரனே, சகோதரியே, இருதயம் நொறுங்குண்டு உண்மையாக தேவனை நோக்கி நாம் கூப்பிடும் போது, இயேசு சுவாமி நமக்கு உதவி செய்ய தயைபெருத்தவராயிருக்கிறார். நம் தேவன் இரக்கமும், மனவுருக்கமும் உள்ள தேவன். உண்மையாய் அவரை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் அவர் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ஆமென்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:-
50,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் செயல்படுகிற நம் ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864