By Village Missionary Movement
Monday, 24-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 24.11.2025
துணை நின்ற தேவன்
"...பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்..." - ஏசாயா 41:13
ஒரு கிராமத்தில் விதவை தாயார் தன்னுடைய இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக வசித்து வந்தார். யாருடைய உதவியும் இல்லாமல், உணவிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒருநாள் சாகலாம் என்று முடிவெடுத்து கடைக்குச் சென்று விஷத்தை வாங்கினார். வீட்டுக்கு வந்து அதை சாப்பிட முற்பட்ட போது, "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று ஒரு சத்தம் உண்டாயிற்று. அவர்கள் பயந்து சத்தம் எங்கே இருந்து வருகிறதென்று யோசித்து கொண்டிருக்கையில், கதவு தட்டுகிற சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது, உணவு பொருட்களுடன் ஒருவர் கதவினருகே நின்றார். அவரிடத்தில், நீங்கள் யார்? என்று கேட்ட பொழுது, அவர் நான் அருகில் உள்ள ஆலயத்தில் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தேன். அவ்வேளையில் தேவன், உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு நான் சொல்லும் இடத்திற்குச் செல் என்றார். அப்படியாக நான் இங்கு வந்தேன் என்றார். அதை கேட்ட தாயார் வியந்து கண்ணீரோடு அவருக்கு நன்றி கூறினார். அப்பொழுது அவர் நீங்கள் தொடர்ந்து தேவனை நோக்கி ஜெபம் பண்ணுங்கள் என்றார். பிறகு இயேசுவை பற்றி அவர்களுக்கு சொன்னதும், அவர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். பின்பு அநேகருக்கு சுவிசேஷத்தைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுடைய வாழ்க்கை ஆசீர்வாதமாய் மாறினது.
வேதத்தில் கூட லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள். இயேசுவை அறியாத அந்த பெண், பவுலின் பிரசங்கத்தைக் கேட்டு, ஆண்டவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். தேவபக்தி உள்ள ஒரு பெண்ணாக திகழ்ந்தாள். அவள் சுவிசேஷத்தைக் கேட்டு மனம் திரும்பியது மட்டுமல்லாமல், தன் வீட்டாரையும் இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தினாள். லீதியாள், கர்த்தருடைய வார்த்தைக்கு தன் இருதயத்தை திறந்து கொடுத்ததினால், தான் மட்டும் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவில்லை. அவள் வீட்டார் அனைவரும் இரட்சிப்பு என்னும் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள்.
பிரியமானவர்களே! கஷ்டத்திலும், கண்ணீரிலும், நோயின் பிடியிலும் அகப்பட்டு, வாழ்க்கையில் விடுதலையே இல்லாமல் வாழ்கின்ற ஜனங்களுக்கு உதவிகள் செய்து, அதன் மூலம் இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது அவர்கள் குடும்பமும் அதினிமித்தம் இரட்சிக்கப்படலாம். அவர் சிறுமைப்பட்டவர்களுடைய கூக்குரலை கேட்கிற தேவன். இரட்சிப்பு கர்த்தருடையது, யாரையும் இரட்சிப்பதற்கு அவர் தயைப்பெருத்தவர். எளியோர், திக்கற்றோர், கைவிடப்பட்டோர் என நாம் யாராக இருந்தாலும், நம்முடைய எல்லா சூழ்நிலையிலும் ஆண்டவர் நமக்கு துணை நிற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
- Mrs .ஸ்வேதா
ஜெபக்குறிப்பு:-
ஆமென் வில்லேஜ் டி.வி. ஏர்டெல் செட் ஆப் பாக்ஸ்- ல் வெளி வர ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864