By Village Missionary Movement
Thursday, 20-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 20.11.2025
உனக்கு என்ன வேண்டும்
"...உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்;..." - எஸ்தர் 5:6
ஒரு ராஜா தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த ஊர் மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தன் பிறந்தநாளன்று அரண்மனைக்கு வந்து அங்குள்ள எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று. ராஜாவின் பிறந்த நாளும் வந்தது. ராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். ஜனங்கள் அரண்மனைக்கு வரத் தொடங்கினர். உள்ளே சென்ற நபர்கள் ராஜாவை வணங்கி, தங்களுக்கு பிடித்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். கடைசியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். ராஜா அவனிடம் உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள் என்றார். அச்சிறுவன் அமைதியாக நின்றான். ராஜா, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். சிறுவன் ராஜாவே, நீர் என் வீட்டிற்கு வர வேண்டும் என்று கூறினான். உடனே ராஜா அங்கிருந்த அமைச்சரை அழைத்து, நான் அந்த சிறுவன் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய் என்றார். சுற்றி நின்ற மக்களோ, இவன் கிடைத்த பொருட்களை வாங்காமல் ராஜாவை தன் வீட்டிற்கு வரச் சொல்கிறான் என்று கேலி செய்தார்கள். பின்பு அமைச்சர் அச்சிறுவன் வீட்டிற்குச் சென்றார். அது ஒரு குடிசை வீடு. உடனே அந்த வீட்டை ராஜா வந்து செல்லும் வகையில் வசதியாக மாற்றினார். அங்கு ராஜாவின் ரதம் செல்ல சாலை வசதியும் செய்யப்பட்டது. பின்பு ராஜா அந்த சிறுவன் வீட்டிற்கு வந்தார். அந்த சிறுவனின் புத்திசாலிதனத்தினிமித்தம், அவன் வீடு சீரமைக்கப்பட்டதோடு, அந்த ஊருக்கும் நல்ல சாலை வசதி செய்யப்பட்டது.
எஸ்தர் புத்தகத்தில் எஸ்தர் ராஜவஸ்திரந்தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள். ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலு மண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தார். அவளுக்கு ராஜாவின் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருந்த பொற்செங்கோலை நீட்டினார்; அப்பொழுது எஸ்தர் கிட்ட வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். விருந்துக்கு வரும் படி கேட்கிறாள். அதன்படி ராஜாவும், ஆமானும் விருந்தில் கலந்து கொள்கின்றனர். விருந்திலே திராட்ச ரசம் பரிமாறப்படும் போது ராஜா எஸ்தரைப் பார்த்து, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதி மட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றார். எஸ்தர் ராஜாவினிடத்தில் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள்.
இதை வாசிக்கும் அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் இன்று எதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நம்முடைய தேவன் நீங்கள் வேண்டுவதையெல்லாம் தர வல்லவர். 1 கொரி.15:19 ல் "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனையே தேடுவோம். தேவன் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். நம் மூலமாய் அநேகர் ஆசீர்வதிக்கப்பட நம்மை பயன்படுத்துவார். ஆமென்!
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:-
கண்மணியே கேள், யோசுவாவே எழும்பு பத்திரிக்கை மூலம் அநேக வாலிபப் பிள்ளைகளின் வாழ்வு பரிசுத்தமாக்கப்பட ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864