By Village Missionary Movement
Tuesday, 11-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 11.11.2025
முடமான நாய்க்குட்டி
"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து
உயர்த்துகிறார்;..." - 1 சாமுவேல் 2:8
நாய்க்குட்டி வாங்குவதற்காக சிறுவன் ஒருவன் கடைக்குள் நுழைந்தான். அங்கு மூன்று நாய்க்குட்டிகள் இருந்தன. ஒரு குட்டியின் விலை ரூ.300, சிறுவனிடமோ ரூ.200 மட்டுமே இருந்தது. இருந்தாலும் குட்டிகளைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற நினைப்புடன் உள்ளே போனான். ஒவ்வொன்றாக கையில் எடுத்துப் பார்த்தான். ஒரு குட்டிக்கு கால் முடமாக இருந்தது. அதை அவன் பார்த்துக்கொண்டே இருந்தான். கடைக்காரர் அவனிடம் "நீ அந்தக் குட்டியை வாங்குவதாக இருந்தால் 200 ரூபாய்க்குத் தருகிறேன்" என்றார். சிறுவனோ நான் சற்று நேரத்தில் வந்து இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி வீட்டுக்குச் சென்று, தன் தாயிடம் இருந்து ஒரு 100 ரூபாயை வாங்கிக்கொண்டு கடைக்கு வந்தான். முடமான நாய்க்குட்டியை கையில் எடுத்துக்கொண்டு 300 ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்தான். அவர் ஆச்சரியத்துடன் "அது கால் முடமான குட்டி இதற்கு 200 ரூபாய் போதும் " என்றார். அப்போது அந்த சிறுவன் தன் காற்சட்டையின் வலது பக்கத்தை உயர்த்தி, அவரிடம் தன் காலைக் காட்டினான். அவனுக்கு வலது கால் இல்லை, மரக்கால் பொருத்தப்பட்டிருந்தது. ஐயா, நான் ஒரு முடவன் என்று பிறர் என்னைக் குறைத்து மதிப்பிடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதை போல முடமானது என்று இந்த நாய்க்குட்டியைக் குறைத்து மதிப்பிட எனக்கு மனமில்லை என்று கூறினான்.
முற்பிதாக்களில் ஒருவர் யாக்கோபு. அவருடைய மனைவிகள் ராகேல் மற்றும் லேயாள். யாக்கோபு லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் லாபானிடத்தில் சேவித்தான். கூச்சபார்வையுள்ள லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள். அவள் அற்பமாய் எண்ணப்படுவதற்கு, அவளது பார்வையிலுள்ள குறைபாடோ அல்லது வேறு எந்த காரணமோ இருந்திருக்கலாம். இதை கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ராகேலோ பல ஆண்டுகளாக மலடியாயிருந்தாள். லேயாள் நான்கு குமாரர்களை பெற்றாள். இப்படியாக, அங்கவீனத்தால் அற்பமாய் எண்ணப்பட்டவளின் சந்ததியை கர்த்தர் பெருகச் செய்தார்.
அன்புக்குரியவர்களே! எந்த நிலையில் இருந்தாலும் சரி உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். மற்றவர்களையும் குறைவாய் எண்ண வேண்டாம். ஏனென்றால் சரீரத்தில் குறைவோடு பிறந்தவர்களும் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவர்கள். இவ்வுலகில் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவர்கள் எல்லோருக்குள்ளும் தேவன் ஏதோ ஒரு தனித்திறமையை வைத்துள்ளார். நமக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை நம் முன்னேற்றத்தைத் தடுக்கும். நம்முடைய சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டை போடும். தாழ்வு மனப்பான்மைக்கு "டா டா" சொல்வோரே வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.
- Bro. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு மாவட்டத்திலும் வீட்டு ஜெபக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட. ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864