By Village Missionary Movement
Monday, 10-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 10.11.2025
NO சொல்லுவோம்!
"...அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்" - நியா.14:3
ஆட்டுக்குட்டி ஒன்று பச்சை பசேல் என்று இருந்த காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்தது. அந்த ஆட்டுக்குட்டியும் தன் விருப்பம் போல் அங்கும் இங்கும் மேய்ந்தது. சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறுகள் இருந்த போதும் அதற்கு எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றதும் அங்கு பெரிய கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றின் உள்ளே தண்ணீர் இருந்தது. அதன் சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்க தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரை சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது. கிணற்றின் உள்ளே ஓரமாக படியும் இருந்தது. அதன் வழியே மெதுவாக கீழே இறங்கியது. பசுமையான புல்லை மேய்ந்து, தண்ணீரும் குடித்தவாறே கிணற்றின் அடிப்பகுதி வரை சென்று விட்டது. தாகம் நன்கு தணியவே, சரி இனிமேல் மேலே செல்லலாம் என முயற்சி செய்து படிகளில் ஏறப் பார்த்தது. பாவம் அதனால் ஏற முடியவில்லை. படிகளின் இடைவெளி அதிகமாகவும், உயரமாகவும் இருந்ததால் அதன் முன் கால்களை வைத்து மேலே எற முடியவில்லை கத்திக் கொண்டேயிருந்தது. மறுநாள் தான் அது எஜமானால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம், கண்களுக்கு அழகாக தேன்றுகின்ற எல்லாவற்றையும் உடனே அடைய நாம் ஆசைப்படக்கூடாது.
பழைய ஏற்பாட்டில் சிம்சோன் என்பவரை அறிவோம். கர்த்தருடைய தூதனானவர் சிம்சோனை குறித்து "அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான், அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்" என்றார். இப்படிப்பட்டதான சிம்சோன் திம்னாத்துக்குப் போய், அங்கே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, "அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்." இப்படியாக சிம்சோன் தன்மேலிருந்த தேவ திட்டத்தை இழந்தான்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நாம் பிறப்பதற்கு முன்பே நம் மீது தேவன் அவர் திட்டத்தை வைக்கிறார். அந்த தேவ திட்டத்திற்கு ஏற்றார் போல் நம்மை வழிநடத்துகிறார். சிம்சோன் தன் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல், அந்த பெண் என் கண்ணுக்குப் பிரியமானவள் என்று கூறி, தேவ திட்டத்திலிருந்து விலகிச் செல்கிறான். நாமும் கூட சில நேரங்களில் காண்கிறதெல்லாம் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவுடனே ஆசைபட்டு, அதனை அடைய விரும்புகிறோம். இது நமக்கு தேவைதானா என யோசித்துப் பார்க்க வேண்டும். எதையும் பார்த்தவுடன் அதை அடைய வேண்டும், வாங்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு No சொல்வோமாக!
- Mrs. சக்தி சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 கிதியோன்கள் எழும்ப ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864