By Village Missionary Movement
Friday, 07-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 07.11.2025
எதிர்த்தவர் மூலம் எழுப்புதல்
"எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்;..." - ரோமர் 8:30
தெய்வபக்தியில் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட "நாராயணன் வாமன் திலக்" இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். கிறிஸ்தவ மார்க்கத்தை வெறுத்த இவர், கிறிஸ்தவ நற்செய்திப் புத்தகங்களையெல்லாம் கிழித்தெறிவார். மாதங்கள் கடந்தோடியது வெறுமை உணர்வு இவரின் இதயத்தில் மேலிடவே இந்து சமயத்திலும் ஈடுபாடில்லாமல், புதிய கொள்கைகளை உருவாக்கி, மக்கள் அதைப் பின்பற்றும்படி செயல்பட்டார். இந்நிலையில் இரயில் பயணமொன்றை மேற்கொண்ட அவர், ஐரோப்பியர் ஒருவரை சந்தித்தார். அவர் கிறிஸ்தவர் என்பதால் பேசத் தயங்கிய திலக், சமஸ்கிருதத்தில் நாட்டம் கொண்டவர் ஐரோப்பியர் என்பதால் பல மணி நேரம் அவருடன் பேசினார்.
பயணத்தின் இறுதியில் அந்த ஐரோப்பியர், திலக்கிடம் ஒரு "புதிய ஏற்பாட்டை" கொடுத்து கட்டாயம் அதை வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். கட்டாயத்தின் பேரில் புதிய ஏற்பாட்டை வாசித்த திலக்கின் உள்ளத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இது வரையிலும் தான் தேடிக் கொண்டிருந்த கேள்விகளுக்கான அனைத்து பதில்களும் புதிய ஏற்பாட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதன் விளைவாக இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தன் இருதயத்தின் வெறுமை நிலை மாறி நிறைவடைந்ததை உணர்ந்தார்.
தன்னை முழுமையாக இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, 1895 ஆம் ஆண்டு முழுகி ஞானஸ்நானம் எடுத்து, தன் கிறிஸ்தவ விசுவாசத்தை அறிக்கையிட்டார். இது மட்டுமல்ல, மகாராஷ்டிரா மக்கள் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் மத்தியிலும் அயராது பாடுபட்டார். மராத்தி மொழியில் 798 கிறிஸ்தவப் பாடல்களை எழுதி மாபெரும் எழுப்புதலுக்கு வழி வகுத்தார். மகாராஷ்டிராவிலும் எழுப்புதல் தீ பற்றி எரிய காரணமானார்.
இதை வாசிக்கும் தேவ பிள்ளைகளே, இக்கடைசி காலத்தில் கர்த்தர் ஒரு வாலிப சேனையை உருவாக்கப் போகிறார். ஒரு "யௌவன ஜனம்" எழும்பி (சங்கீதம் 110:3) கர்த்தருக்காய் இந்த உலகத்தையே அசைக்கப் போகிறார்கள். வரப்போகும் எழுப்புதலில் ஒரு சுவிசேஷத் தலைமுறை எழும்பப் போகிறது. நம் பிள்ளைகளை கர்த்தர் நிச்சயமாய் சந்திப்பார். சுவிசேஷத்திற்கு எதிர்த்து நின்ற சவுல் என்ற வாலிபனைக் கர்த்தர் சந்தித்தார். கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். தேவனுடைய சித்தம் அறியவும், அவரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய் மொழியைக் கேட்கவும் செய்து அவர்களை பவுலைப் போலவே வல்லமையாய்ப் பயன்படுத்துவார்.
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் கிறிஸ்துவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864