By Village Missionary Movement
Wednesday, 29-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 29.10.2025
கர்த்தரின் கரம்
"...உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது;..." - சங். 18:35
சீனாவில் ஒரு கண்ணாடி பாலம் இரண்டு மலைகளுக்கு ஊடாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் உள்ளது. இதில் நடந்து சென்றால் ஆகாயத்தில் நடப்பது போன்ற உணர்வு இருக்கும் என அதை நேரில் பார்த்த பலரும் சொல்வதுண்டு. இதை பார்க்க விரும்பிய ஒருவர் தன் நண்பர்களுடன் அங்கு சென்றார். அந்த கண்ணாடி பாலத்தில் நடப்பதற்கு மேலே சென்று பார்த்தால் அங்கு கண்ணாடி இருப்பதே அவர் கண்களுக்கு தெரியவில்லை. கண்ணாடியின் வழியே கீழே பார்த்தால் அகல பாதாளம் தான் தெரிந்தது. ஆம், கீழே மலை, செடி, மரங்கள் என அவற்றையெல்லாம் பார்த்ததும், விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்று எண்ணிய அவர் அங்கு வர மறுத்தார். நண்பர்களின் கட்டாயத்தால் வந்து ஓரத்திலிருக்கும் கம்பியைப் பிடித்து மெதுமெதுவாக சென்றார்.
கீழே பாதாளம் இருந்தாலும் நடுவில் ஒரு கண்ணாடி தன்னைத் தாங்குகிறது என்ற எண்ணம் வருவதில்லை. என்ன தான் கண்ணாடியில் காலை மிதிக்கும் உணர்வு இருந்தாலும், கண் கீழே உள்ள ஆழத்தைதான் பார்க்கிறது. மனதில் பயமும் எழுகின்றது.
ஆனால் தாவீது அவ்வாறு இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார். கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்த போதும் கூட சுமார் 7 வருடங்களாக தாவீது நாடோடியைப் போல அலைந்து திரிகிறார். வனாந்தரம், குகை, அந்நிய தேசம் என சுற்றித் திரிகிறார். சவுல் ராஜா தாவீதின் பிராணனை வாங்க வேண்டும். தன் மகன் ராஜாவாக வேண்டும் என எண்ணுகிறார். தாவீது வனாந்தரத்தில் அலைந்து திரிகிறார். மனதில் வேதனை, உடலில் பெலவீனம், சில நேரங்களில் சவுலின் பின்தொடரல், பிராணன் போய்விடுவது போன்ற சூழ்நிலை. ஆனாலும் தாவீது, "உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது" என்கிறார். யூதாவின் வனாந்தரத்திலிருக்கையில் "என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது. உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது" (சங். 63:8) என்கிறார்.
பிரியமானவர்களே, நாமும் அந்த கண்ணாடி பாலத்தில் நடப்பது போலத்தான் நம் வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் கண்கள் நமக்கு கீழே உள்ள பிரச்சனை, அழிவை பார்க்கிறதா? கண்ணால் காண்பவற்றை அப்படியே நம்பிவிடாமல் ஆத்துமாவிற்குள் செயல்படும் தேவ பிரசன்னத்தை உணர்ந்து முன்னேறுங்கள். கர்த்தரின் கரத்தை பிடித்து அவரை மாத்திரம் நம்பி தாவீதைப் போல் பயமின்றி முன்னேறுங்கள். நாம் கீழே விழாதவாறு பாதுகாக்கும் கண்ணாடியை போல நம்மை பாதுகாக்கும் கர்த்தரின் கரத்தை நம் கண்கள் நோக்கட்டும். தேவன் உங்களுக்கென வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை நிச்சயம் சுதந்தரிப்பீர்கள்.
- Bro. ஸ்டாலின் ராஜா
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு தாலுகாவிலும் நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864