By Village Missionary Movement
Tuesday, 28-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 28.10.2025
நிதானம் தேவை
"மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" - நீதி. 19:11
ஒரு காட்டுப் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் ஓரத்தில் மிகப்பெரிய பழமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் குரங்கு ஒன்று அங்கும் இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருந்தது. அதற்கு தாகம் எடுத்ததால் மரத்திலிருந்து இறங்கி ஆற்றின் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது மரத்திலிருந்த பழம் ஒன்று சரியாக குரங்கின் தலையில் விழுந்தது. குரங்கிற்கு வந்ததே கோபம்! மரத்தில் ஏறி அதிலிருந்த காய்களையும், பிஞ்சுகளையும், பழங்களையும் சரமாரியாக பறித்து எறிந்தது. சில பழங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன, சில பழங்கள் அப்பகுதியில் ஆங்காங்கே சிதறுண்டு ஓடின. குரங்கிற்கு மரத்தைப் பழிவாங்கி விட்டோம் என்று ஒரே மகிழ்ச்சி. மீண்டும் தன் வழியை பார்த்து சென்றது குரங்கு. சில நாட்களுக்குப் பின்பு கீழே விழுந்த பழங்கள் செடியாக முளைக்கத் தொடங்கி பின்னாட்களில் பெரிய மரமாக வளர்ந்தது. அந்த குரங்கிற்கு தெரியாது தன்னால் தான் இத்தனை மரங்கள் உருவானது என்று! தமிழில் இப்படி ஒரு பழமொழி உண்டு, "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று! ஆம், கோபத்தில் நாம் செய்யும் செயல்களோ, எடுக்கும் முடிவுகளோ ஞானமாய் இராது.
வேதத்திலே, தாவீதின் மீது சவுலுக்கு ஏற்பட்ட கோபத்தினால் இழப்பு சவுலுக்கு தான் வந்தது. ஆனால் தாவீதோ கர்த்தரின் கிருபையினால் வரவர விருத்தி அடைந்து வளர்ந்து கொண்டே இருந்தார். இறுதியில் சவுலும் அவன் குடும்பமும் அழிந்ததை வேதத்தில் வாசிக்கிறோம். சவுலுக்கு ஏற்பட்ட காரணமில்லாத கோபமும் தாவீதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பொறாமையுமே இவ்வனைத்திற்கும் காரணமாயிற்று.
பிரியமானவர்களே! மாம்சத்தில் இருக்கும் நம் அனைவருக்கும் கோபம் வருவது இயல்பே. ஆனால் அந்தக் கோபத்தில் நாம் நம்முடைய நிதானத்தை இழந்து விடக்கூடாது. கோபத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் கூடாது. ஒரு தேவ மனிதர் இவ்வாறு சொன்னார், "உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரச்சனையை உண்டாக்கிய மனிதருக்கு, பதில் கடிதம் நீங்கள் கோபத்தில் எழுதினாலும் அதை உடனே போஸ்ட் பண்ண வேண்டாம். இரண்டு நாள் வைத்திருங்கள். அதற்குப் பின் தேவைப்பட்டால் அனுப்பலாம்" என்று. ஆம், அந்த இரண்டு நாளில் காரியத்தை நிதானிப்போம், நம் கோபம் மாறும். பிரச்சனை பூகம்பமாகாதபடிக்கு இது தடுக்கும். பிரியமானவர்களே, பழிவாங்குதல் நமக்குரியது அல்ல, அது கர்த்தருக்குரியது. எனவே நிதானத்தோடு வாழ்வோம்.
கோபம் நமக்கு சாபம்!
மன்னிப்பு நமக்கு லாபம்!
- Bro. அனீஸ் ராஜா
ஜெபக்குறிப்பு:-
50,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்தில் செயல்படுகிற ஒவ்வொரு ஊழியர்களையும் தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864