By Village Missionary Movement
Monday, 27-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 27.10.2025
எதிர்பார்க்கும் அன்பு
"அவர் (தேவன்) ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்;..." - 1 யோவான் 1:7
ஒரு சகோதரி சிறுவயதில் இயேசுவை அறிந்திருந்ததால் தனக்கு என்ன வேண்டும் என்றாலும் இயேசுவிடம் கேட்பாள். அவள் வளர்ந்த பின்பு இயேசுவை விட்டு உலகத்தின் பாதையில் போய்விட்டாள். அப்படியிருக்க வாலிப வயதை அடைந்ததும் அவளுக்கு ஒரு வியாதி வந்தது. அவள் பிழைக்க மாட்டாள் என்று மருத்துவர்கள் சொல்லி கைவிட்டு விட்டார்கள். ஆனால் இயேசுவோ அவளைக் கைவிடவில்லை, அவளைத் தேடி சென்று அவளுக்கு பூரண சுகத்தைக் கொடுத்தார். இயேசுவிடம் நன்மையை பெற்ற அவளோ திரும்பவும் உலகத்தின் பாதையில் சென்றதால் நிறைய ஏமாற்றங்கள், அவமானங்களை அடைந்த நிலையில் தற்கொலை செய்ய முயன்ற போது இயேசுவின் முகம் அவளுக்குத் தெரிந்தது. அவர் சிறு வயது முதல் காட்டின அன்பை நினைத்து அழுது மன்னிப்பு கேட்டாள். இன்றும் ஊழியம் செய்து வருகிறாள். எத்தனையோ முறை பின்மாற்றமடைந்து போனாலும் அவள் மேல் ஆண்டவர் வைத்த அன்பு மாறவில்லை.
இதைப்போல் வேதத்தில், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சீஷர்களிடம் தான் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைப் பற்றி கூறினார். அப்பொழுது பேதுரு உமது நிமித்தம் எல்லாரும் இடறல் அடைவார்கள், நான் இடறலடையமாட்டேன் என்றார். இயேசு அதற்கு இந்த இராத்திரியிலே சேவல் கூவுவதற்கு முன்னே மூன்று தரம் நீ என்னை மறுதலிப்பாய் என்றார். அதற்கு பேதுரு நான் உம்மோடு கூட மரிக்க வேண்டியதாயிருந்தாலும் மறுதலிக்க மாட்டேன் என்றார். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அரமனை முற்றத்தில் பேதுரு உட்கார்ந்திருந்தார். வேலைக்காரி ஒருத்தி பேதுருவைப் பார்த்து நீ இயேசு கூட இருந்தவன் தானே என்றாள். அதற்கு பேதுரு எனக்குத் தெரியாது என்று மறுதலித்தார். அதுபோல பேதுரு மூன்று முறையும் இயேசுவை மறுதலிக்கிறார். சேவல் கூவின சத்தம் கேட்டதும் இயேசு சொன்னது நினைவுக்கு வந்து, மனங்கசந்து அழுது, மன்னிப்புக் கேட்டு பின்பு கர்த்தரால் மிகவும் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டார்.
அருமையான சகோதரனே! சகோதரியே! இதே போல நம்முடைய வாழ்க்கையில் தேவன் அனேக அற்புதங்களைச் செய்து இருக்கிறார். ஆனால் நாமோ அதை மறந்து சில நேரங்களில் அவரை மறுதலிக்கிறோம். ஆனாலும் அவர் நம்மீது வைத்த அன்பின் காரணமாக நம்மை மீட்க சிலுவையில் மரித்தார். நண்பனின் அன்போ நழுவி விடும், தந்தையின் அன்போ தோற்றிடும் ஆனால் தேவனின் அன்போ என்றும் மாறாது. நம்முடைய விலையேறப்பெற்ற ஆத்துமா தேவனுக்கே சொந்தம். தேவனிடம் நாம் திரும்பும் போது நித்திய ஜீவனை நமக்குத் தந்திடுவார். பரலோகத்தில் அவரோடு என்றென்றும் வாசம் செய்வோம். எனவே கிரயம் கொடுத்து, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி நம்மை மீட்டு, நமக்காக தமது கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்திய இயேசுவில் அன்புகூர இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
- Sis.சிந்து
ஜெபக்குறிப்பு:-
50,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்தில் நம்மோடு இணைந்து செயல்படுபவர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864