By Village Missionary Movement
Wednesday, 22-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 22.10.2025
தீமையினின்று காக்க
"நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; தேவனோ,.. அதை நன்மையாக முடியப் பண்ணினார்" - ஆதி.50:20
ஐரோப்பாவின் வடக்கிலுள்ள காட்டிற்கு சென்று இன்பமாக நாளை கழிக்கலாமென்று சுமார் 15 பேர் கொண்ட ஒரு நண்பர் கூட்டம் எண்ணியது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தொலைவில் கண்ட ஒரு காட்சி அவர்களை அதிர்ச்சியடைய செய்தது. புகை! நெருப்பு! அக்காட்டில் ஒரு பகுதியிலுள்ள மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்ததன் விளைவாக தீப்பொறி பறந்தது. அது பெருந்தீயாக காட்டையே பற்றி கொண்டது. அதை பார்த்த அவர்கள் திகைத்தனர். இந்த நிலையில் அந்தத்தீயை சமாளிக்க சிறுவன் ஒருவன் முன்வந்தான். அவன் ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி பின்பு சருகுகள் நிறைந்த இடத்தில் அதை போட்டான். காட்டுத்தீ பரவி தங்களை நோக்கி வருவதற்குள் அந்தப் பையன் வேறு பக்கத்திலேயும் நெருப்பு வைத்து விட்டானே என்று எல்லாரும் அவனை பிடித்து அடித்து விட்டார்கள். அதற்குள் சுமார் 50 அடி சுற்றளவிலுள்ள புல் பூண்டுகளெல்லாம் எரிந்து சாம்பலாயின. அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். அப்போது காட்டுத்தீ அவர்களை சுற்றிலும் பரவி நன்றாக எரிந்தது. ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் பக்கம் தீ வரவே இல்லை. ஏனென்றால் அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் எரிந்து சாம்பலான இடம். எனவே காட்டுத்தீ அங்கு வர வாய்ப்பேயில்லை. ஆம், அந்த பையன் வைத்த நெருப்பு ஏற்கனவே அங்குள்ளவைகளை எரித்து விட்டதால் அனைவரும் பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இதைபோலவே வேதத்திலும் வரும் ஆபத்திலிருந்து ஒரு குடும்பத்தையே பாதுகாத்த ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது. யோசேப்பு என்ற வாலிபனை அவனுடைய சகோதரர்கள் பகைத்து, காசுக்கு விற்றுப்போட்டனர். யோசேப்பு தான் சிறை கைதியாக கொண்டு செல்லப்பட்ட தேசத்தில் உயர்த்தப்படுகிறார். அந்நாட்களில் அவர் மிகவும் ஞானமாய் செயல்பட்டதினால் வரப்போகும் பஞ்சமான பேராபத்திலிருந்து தேசத்தையும், தன்னுடைய முழுக் குடும்பத்தையும் பாதுகாத்தார். யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிற்கு தீங்கு செய்ய நினைத்தார்கள். ஆனால் தேவனோ வெகு ஜனங்களை உயிரோடே காக்கும் படிக்கு அந்த தீமையை நன்மையாக முடியப் பண்ணினார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே, மேற்கண்ட இரு சம்பவங்களிலும் சிறுவன் அடிக்கப்படுகிறான், யோசேப்பும் சகோதரர்களால் தாக்கப்படுகிறான். ஆனால் இருவருமே நன்மையையே செய்தனர். நம்மோடு கூட இருக்கின்ற நபர்களாக இருக்கலாம் அல்லது குடும்ப உறவுகளாக இருக்கலாம், நாம் செய்த நன்மைக்கு பதிலாக அவர்கள் கை நம் மேல் ஓங்கி தீங்கு விளைவிக்கலாம். தீமையினின்று காக்க அழைக்கப்பட்ட நாம் மற்றவர்களுக்கு நன்மையே செய்வோம்.
- Bro.சங்கர் ராஜ்
ஜெபிக்குறிப்பு:-
ஒரு கிராமத்திற்கு சுவிசேஷம் அறிவிக்க குறைந்த பட்சம் ரூபாய் 1000 கொடுப்போர் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864