By Village Missionary Movement
Monday, 20-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 20.10.2025
கர்த்தருக்கு முதலிடம்
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,..." - மத்தேயு 6:33
பல்பொருள் அங்காடி (super market) வைத்திருந்த ஒருவர் ஞாயிறு தோறும் கடைக்கு விடுமுறை விட்டு ஆலயம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை, அப்போது கடை திறந்திருந்தால் நலமாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தனர். முதலாளியும் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்லாமல் கடையைத் திறந்தார். எப்பொழுதும் கூட்டம் அலைமோதும். முதலில் வியாபாரம் விறுவிறுப்பாகச் சென்றது. நாளடைவில் மக்கள் கடனுக்கு வாங்க ஆரம்பித்தனர். வியாபாரம் நஷ்டமடைய ஆரம்பித்தது. நாளடைவில் கூட்டம் குறைந்து கடையையே மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இன்றும் பலர் இதே போல் தான் பிறருடைய பேச்சைக் கேட்டு உலகப் பொருட்களுக்கும், உலக காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் வேதத்தில் நாம் பார்க்கும் போது முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் என்று கூறுகிறது. தானியேல், ராஜாவைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்கக் கூடாது என சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் கூட, தான் முன்பு ஜெபித்து வந்தபடியே தொடர்ந்து ஜெபித்தார். தானியேல் அடிமையாகக் கொண்டுவரப்பட்ட தேசத்தில், தேசம் முழுவதுக்குமான மூன்று பிரதானிகளில் ஒருவராக உயர்த்தப்பட்டார். அந்த தேசத்தில் கர்த்தர் நாமம் மகிமைப்பட்டது.
அது போல நம்முடைய வாழ்விலும் கூட முதல் மணித்துளிகளைக் கர்த்தருடைய பாதத்தில் செலவிடும்போது, நம் வாழ்விலும் கர்த்தர் மகிமைப்படுவார். கர்த்தரின் காரியங்களான வேதம் வாசித்தல், ஜெபித்தல், ஆலயக் காரியங்கள், ஆத்தும ஆதாயத்துக்கடுத்த காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது, கர்த்தர் நம் வாழ்வில் உயர்வைக் கட்டளையிட்டு நன்மையான காரியங்களை காணும்படிச் செய்வார்.
அன்பானவர்களே! உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாமல் காணப்படுகிறதா? நம் முதல் அன்பும், முழு அன்பும் கர்த்தர் மேல் இருக்கும் போது, கர்த்தருக்கு முதலிடம் என்பது தானாக வந்து விடும். அப்படி முதலிடம் கொடுக்கும் போது தேவன் நம்மை உயர்த்துவது நிச்சயம். தானியேலின் வாழ்வில் உயர்வைக் கட்டளையிட்ட தேவன் நம் வாழ்விலும் உயர்வைக் கட்டளையிட வல்லவர். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேட நாம் மாத்திரமல்ல, நம்முடைய குடும்பத்தையும், நம்முடைய சந்ததியார்களையும் பயிற்றுவிப்போம்.
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:-
மெகா போன்கள், ப்ரொஜெக்டர் வாங்க தேவைகள் சந்திக்கப்பட
ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864