By Village Missionary Movement
Wednesday, 15-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 15.10.2025
தேவன் பயன்படுத்தும் பாத்திரம்
"...மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்" - 2 தீமோ. 2:20
நான் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்த நாட்களில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். எங்கு மாறுதல் கிடைக்கும் எப்பொழுது அனுப்பப்படுவோம் என்று தெரியாது. ஆனால் நான் ஜெபம் செய்து ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுவேன். ஆண்டவரே! நான் எங்கு இருந்தாலும் உம்முடைய கரத்தில் பயனுள்ள பாத்திரமாய் இருக்க வேண்டும். "தந்தேன் என்னை இயேசுவே, இந்த நேரமே உமக்கே. எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன்" என்று பாடிக் கொண்டே இருப்பேன். தேவனோ, நான் நினைப்பதற்கும், வேண்டிக் கொள்வதற்கும் மேலாக அதிக நன்மையான இடத்தைத் தந்து விடுவார். நான் ஆண்டவரைத் துதித்துக் கொண்டே போக வேண்டிய இடத்திற்குச் சென்று விடுவேன். ஆண்டவர் எவ்வளவு நல்லவர்!
வேதத்தில் புதிய ஏற்பாட்டில், அப்.பவுல் தீமோத்தேயுக்கு எழுதும் போது இப்படியாக எழுதுகிறார். ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். பொன், வெள்ளி போன்ற பாத்திரங்கள் விலையேறப்பெற்ற உலோகத்தால் செய்யப்பட்டவைகளாதலால் அவைகள் கனத்துக்குரியவைகளாகக் கருதப்படும். அவைகள் பாதுகாப்பாக பெட்டக அறையில் வைக்கப்பட்டிருக்கும். அவைகளின் பயன்பாடு அதிகமாக இருக்காது. பண்டிகை காலங்கள், உறவினர்கள் வருகையின் போது மட்டுமே பயன்படும். இவ்விதமான மக்கள் தங்களை விலையேறப்பெற்றவர்களாக எண்ணுவர். இவர்கள் கர்த்தரால் பயன்படுவது மிகக்குறைவே! ஆனால் மண்ணாலோ, மரத்தாலோ செய்யப்படும் பாத்திரங்கள் எல்லோராலும் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன, விலையும் மலிவு! நாம் கர்த்தருடைய கரங்களில் எப்படிப்பட்ட பாத்திரங்களாய் இருக்க விரும்புகிறோம்? கர்த்தர் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பேதைகளைத் தெரிந்து கொண்டார். பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டு அவர்கள் மூலம் தாம் விரும்பிய ஊழியத்தை நிறைவேற்றினார்.
நாம் ஒவ்வொருவரும் நம்மையே ஆராய்ந்து பார்ப்போம். நாம் கர்த்தருடைய கரத்தில் எப்படிப்பட்ட பாத்திரமாய் இருக்க விரும்புகிறோம்? அவருக்கு பயனுள்ள பாத்திரமாய் மாற அவரிடம் நம்மை முற்றிலும் அர்ப்பணிப்போம்! அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் பாத்திரமாக நம்மை மாற்றும் பொறுப்பை அவரிடமே ஒப்படைப்போம். மண்ணால் செய்யப்பட்ட பாத்திரமாக இருந்தால் அவருக்கு மனதார நன்றி செலுத்துவோம். ஏனென்றால் தேவனுடைய சித்தம் செய்கிற எல்லோருக்கும் பலன் உண்டு. திராட்ச தோட்டத்தில் வெவ்வேறு நேரம் பணி அமர்த்தப்பட்டவர்கள் யாவருமே ஒரு பணம் கூலியாகப் பெற்றது போல், தேவனுடைய சித்தத்தை நாம் இருக்கும் இடத்தில் மனமகிழ்வோடு செய்வோமானால் ஏற்ற காலத்தில் பலனைப் பெறுவோம். ஆமென்!
- Mrs.புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
7000 மிஷனெரிகள், ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864