By Village Missionary Movement
Thursday, 09-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 09.10.2025
வரங்கள் செயல்பட
"...அவர்(இயேசு)பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணவும்... அவர்களை ஏற்படுத்தினார்." - மாற்கு 3:14,15
சகோதரி வைலட் ஆரோன் என்னும் தெய்வீகத் தாயார் அவர்கள் இனிமையாக பாடுபவர்கள். அவர்கள் பிசாசுகளைத் துரத்தும் வரத்தை எப்படி பெற்று கொண்டார்கள் என்றும், தேவன் கொடுத்த ஆலோசனை பற்றியும் சொல்கிறார்கள். "மகளே, உன் கரத்தை உயர்த்தி மூன்று மணி நேரம் என்னை ஸ்தோத்திரம் பண்ணு; உன் கைகளை நான் ஆசீர்வதிப்பேன்; நான் உனக்குக் கொடுக்கும் ஊழியத்தை நிறைவேற்ற, என் பாதத்தில் நீ காத்திரு" என்றார் கர்த்தர். இத்தாயாரும் இதற்கென்று ஒரு நாளை நியமித்து தேவனுடைய பாதத்தில் தனித்து இருந்து ஜெபித்து காத்திருந்தார்கள். தன் கைகளை உயர்த்தி கர்த்தரைத் துதித்து கொண்டிருந்தார்கள். ஒன்றரை மணி நேரம் கடந்ததும் கைகளில் தாங்க முடியாத வேதனை. இந்நிலையில் "தேவனே, என்னால் முடியவில்லை" என்று கூறி அழுதார்கள். அப்பொழுது ஒரு தேவதூதன் இறங்கி வந்து அவர்களுடைய இரண்டு கைகளையும் தூக்கி தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்பு அடுத்த ஒன்றரை மணி நேரம் தேவனை ஸ்தோத்தரிக்கவும், துதிக்கவும் செய்தார்கள். அன்றைக்கே கர்த்தருடைய கிருபைகளையும், வல்லமையையும், வரங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.
இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே, உங்களுக்கும் வரங்களோடு ஊழியம் செய்ய வேண்டும் என்றும், கிராமங்களுக்குள் சென்று சுவிசேஷம் அறிவிக்கும் போது பிசாசுகள் ஓட வேண்டுமென்றும், வியாதியஸ்தர்கள் சுகம் அடைய வேண்டும் என்றும் வாஞ்சையாய் இருக்கிறதல்லவா? இதற்கு சில காரியங்கள் நாம் செய்ய வேண்டியது அவசியம். அது என்னவென்றால் கர்த்தருடைய பாதத்தில் மணிக்கணக்காய் காத்திருந்து தனி ஜெபத்தில் தேவனோடு கூட உறவாடுவதே! இயேசு கிறிஸ்துவும் தமது சீஷர்களை முதலாவது தம்மோடு கூட இருக்க தெரிந்தெடுத்தார் (மாற்கு 3:14,15).
நாம் தேவனுடைய பாதத்தில் இருக்கும் போது தான் அவர் அநேகக் காரியங்களை கற்றுக் கொடுத்து, ஊழியத்தில் நாம் செய்ய வேண்டியவற்றை தெரியப்படுத்துவார். தேவசித்தம் அறியாமல் நாம் ஊழியம் செய்யும்போது பலன் கிடைக்காது, ஆத்தும அறுவடை செய்ய முடியாது. அவர் சித்தம் செய்யும் ஊழியரைத் தான் பரலோகம் அங்கீகரிக்கும், அப்போதுதான் வரங்கள் செயல்படும். கர்த்தருக்கு பிரியமானதை தான் செய்ய வேண்டும். பெயர் பிரஸ்தாபத்திற்காக ஊழியம் செய்தால் நாம் பரிதபிக்கப்பட்டவர்களாக மாறிவிடுவோம். ஆகையால் பிரியமானவர்களே, நம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவனுடைய சித்தம் இன்னதென்று அறிந்து, உடனே அதற்கு கீழ்ப்படிந்து வரங்களைப் பெற்றுக் கொள்வோமாக.
- Bro. தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
தமிழ்நாட்டின் எல்லா தாலுகாக்களிலும் இரண்டிரண்டு தெபோராள்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864