By Village Missionary Movement
Wednesday, 08-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 08.10.2025
நேர்மையான வெற்றி
"...உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும்... ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக" - தீத்து 2:8
கிழக்காசிய விளையாட்டுகளில் மாரத்தான் போட்டியில், சிங்கப்பூர் வீரர் ஆஷ்லி லூயி, எல்லோரையும் முந்திக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் ஏதோ தவறு நடந்து விட்டதாக உணர்ந்த அவர், தனக்கு முன் இருந்த வீரர்கள் தவறான திருப்பத்தை எடுத்ததால் பின் தங்கியதை உணர்ந்தார். அவர்களுடைய பிழையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, ஆஷ்லி தொடர்ந்து ஓடி ஜெயித்திருக்கலாம். ஆனால் அவருக்குள் காணப்பட்ட நேர்மை மனப்பான்மை அப்படி வெல்வது ஒரு உண்மையான வெற்றியாய் இராது என்று உணர்த்தியது. மற்றவர்களை விட வேகமாய் ஓடி ஜெயிக்க வேண்டுமேயன்றி, மற்றவர்களின் பிழை தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருக்கக் கூடாது என்று நினைத்தார். தனக்குள் எழுந்த இவ்வுணர்வின் நிமித்தமாக தன்னுடைய ஓட்டத்தின் வேகத்தை சற்றே குறைத்து, தனக்கு பின்னே ஓடுபவர்களுடன் தானும் இணைந்து கொண்டார்.
ஆஷ்லி பந்தயத்தின் முடிவில் தோற்று பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தாலும், தன் நாட்டு மக்களின் உள்ளத்தை வென்றார். அவருடைய நேர்மையை பாராட்டி அவருக்கு ஒரு சர்வதேச விருதும் வழங்கப்பட்டது. கிறிஸ்தவன் என்பதற்கு இவருடைய செயல் ஒரு சான்றாக அமைந்தது. இவரால் எப்படி இதைச் செய்ய முடிந்தது? என்ற கேள்வியும் அநேகருடைய மனதில் எழுந்தது. கிறிஸ்துவின் அன்பை சொல்வதோடு மாத்திரமல்லாமல் தன் செயலிலும் உண்மையாயிருந்து காண்பித்தார். நாம் மற்றவர்களுக்கு வேதத்தின்படி ஆலோசனை சொல்ல வேண்டுமானால் எளிதாக பேசுவோம். வசன சம்பவங்களை ஆதாரத்துடன் சொல்லுவோம். ஆனால் அவற்றை நம் வாழ்வில் நினைத்துப் பார்ப்பதில்லை. அப்போஸ்தலனாகிய பவுலால் "என்னை பின்பற்றுங்கள்" என்று தைரியமாக கூற முடிந்தது. ஆம், அவருடைய வாழ்வு கிறிஸ்துவை பிரதிபலிப்பதாயிருந்தது.
பிரியமானவர்களே, தினமும் வேதத்தை வாசிக்கிற நாம், நம் செயல்களில் வசனத்தைக் கைகொள்கிறோமா என சிந்திப்போம். என் வாய் மட்டும் வசனத்தை சொல்கிறதே, என் வாழ்வு அவரை காட்டுகிறதாக இருக்கிறதா என சிந்திப்போம். ஆவியானவர் நமக்குள் இருப்பதால், நம்மால் வித்தியாசமாய் வாழ முடியும் என்பதை பிறருக்கு நாம் செய்யும் நன்மையான கிரியைகள் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தும். நம் சொல்லை விட நம் கிரியைகள் வீரியம் வாய்ந்தது. புறஜாதி மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியது. நாம் அவ பக்தியையும், லௌகீக இச்சைகளையும் வெறுப்பது, மக்களை தேவனிடம் திருப்பக்கூடியது. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆஷ்லி லூயி அன்றைய தினத்தில் நேர்மையான வழியில் வெற்றி பெற்றதால், இன்றும் பேசப்படுகிற மனிதராக இருக்கிறார். நமக்கு எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நேரிட்டாலும் நேர்மையை மாத்திரம் கடைபிடிப்போம்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
தெபோராள்கள் ஊழியம் செய்யும் கிராமங்களில் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864