By Village Missionary Movement
Tuesday, 07-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 07.10.2025
தீபமும் வெளிச்சமும்
"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" - சங்கீதம் 119:105
"வேதப்புத்தகம் மிக மிகப் பழமையானது. வேத வசனங்கள் தற்கால உலகிற்குப் பொருந்தாதவை" எனக் கூறுபவர்களுக்கு உலகப் புகழ்பெற்ற சுவிசேஷகர் D.L மூடி கூறும் பதில், "சூரியன் மிகப் பழமையானது என்பதால் அதன் வெளிச்சத்தை பயன்படுத்த முடியாது என்றோ, ஜன்னல்கள் இல்லாத வீடுகளைக் கட்டி பகலிலும் மின்விளக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றோ சவால் விட முடியுமா? வேத வசனங்கள் தான் பாவம், மரணம், பாவ மன்னிப்பு, இரட்சிப்பு ஆகியவற்றைக் குறித்து போதிக்கிறது. நம் ஆத்துமாவை நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தும் பாதையில் தீபமாகவும், வெளிச்சமாகவும் இருந்து நடத்துகின்றன" என்றார்.
நான் எதற்காக இந்த உலகத்தில் வாழ்கிறேன்? எங்கு போகிறேன்? சமாதானத்தின் வழி எது? பொய் வழி எது? மெய் வழி எது? என் பிரச்சனைக்கான தீர்வு என்ன? பிள்ளைகளை வளர்ப்பது, அவர்களின் எதிர்காலம், திருமணம் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் வேத வசனங்கள் தீபமாகவும், வெளிச்சமாகவும் இருந்து, சரியான தீர்வுகளுக்கு நேராக நம்மை நடத்துகிறது.
பழமையான ஜோதிடம், சகுனம், குறிபார்த்தல் மூலமாகவோ, நவீன Google மூலமாகவோ சரியான பதிலோ, தீர்வோ கிடைக்காது. எனவே சங்கீதக்காரன் "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை" (சங்.119:165) என்று கூறுகிறார். நமது காரியங்களை குறித்து தேவ சமுகத்தில் ஜெபத்துடன் காத்திருக்கும் போது, தேவன் வசனம் மூலமாகவோ, ஊழியக்காரர் மூலமாகவோ வாக்குத்தத்தங்கள் கொடுத்து நம்மோடு பேசுவார். "நீர் என்னை நம்பப் பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்" (சங். 119:49) என்று ஜெபித்து வந்தால், தேவன் நம் காரியங்களில் அற்புதம் செய்வார். என் மகனின் வாழ்க்கைத் துணைக்காக ஜெபித்து வந்த போது ஆதி.24:17-19 ல் உள்ள வசனங்கள் மூலமாக தேவன் என்னோடு பேசினார். எந்த பெண் வீட்டார், பெண்ணுக்கு அதிகமாக உபசரிக்கும் குணம் உண்டு என்று சொல்கிறார்களோ, அந்த பெண்ணே உன் மகனுக்கு நான் நியமித்த பெண் என்று கூறினார். அப்படியே அவனுக்கு ஆசீர்வாதமான மணவாழ்க்கை அமைந்தது.
பிரியமானவர்களே! நம் ஆவி, ஆத்துமா, சரீரம், உலக காரியங்கள் எல்லாவற்றிற்கும் வேத வசனங்களே தீபமும், வெளிச்சமுமாக விளங்குகின்றன. ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து, அதனை நம்முடைய வாழ்வில் அப்பியாசிக்கும் போது வசனம் நம் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமாகவும் அமையும். எனவே வேதத்தை வாசித்து, தியானிப்போம். ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
தெபோராள் ஊழியர்களின் சுகத்திற்காக, பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864