Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.10.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 04-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 04.10.2025

 

வாங்காத பசுவும் வீணான சண்டையும் 

 

"...வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்" - தீத்து 3:9

 

ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வசித்து வந்தார்கள். கணவன் வேலைக்குச் செல்வதே இல்லை. எனவே மனைவி கணவனைப் பார்த்து, ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதிக்க கூடாதா என்றார்கள். உடனே கணவன் மனைவியிடம், நாம் ஒரு ஆடு வாங்கலாம். அதற்கு உன் அப்பாவிடம் பணம் வாங்கி வா. மேலும், அந்த ஆடு குட்டி போடும். குட்டிகள் வளர வளர நிறைய ஆடுகளாகும். ஆடுகளை விற்று ஒரு பசு மாடு வாங்கலாம். அந்த பசு மாடு பால் தரும். அந்த பாலை விற்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். நாமும் கூட காப்பி குடிக்கலாம். உடல் நலம் சரியில்லாத என் தந்தைக்கும் தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம் என்றார். மனைவியும் ஆமாம், ஆமாம் அடுத்த தெருவிலிருக்கிற என் அம்மாவுக்கு கூட கொடுக்கலாம் என்றாள். அதை கேட்ட கணவனுக்கு கோபம் வந்து விட்டது, "உன் அம்மாவுக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்று கணவன் கத்த ஆரம்பித்தார். இவ்வாறு ஒருவரை ஒருவர் திட்ட சண்டை வளர ஆரம்பித்தது. சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் அங்கே வந்து விஷயத்தை அறிந்து கொண்டு, கணவனைப் பார்த்து, ஏப்பா உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரையெல்லாம் நாசம் செய்து விட்டது. நீ எனக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு கணவன், நான் வாங்காத பசு மாடு நீ வாங்காத தோட்டத்தை எப்படி மேய்ந்து போட்டது என்றார். உடனே பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் வாங்காத பசுமாட்டிடமிருந்து உன் மனைவி அவர்கள் அம்மாவிற்கு எப்படி பால் கொடுப்பாள் என்றார். தங்கள் தவறை உணர்ந்த இருவரும் வெட்கித் தலைகுனிந்தார்கள்.             

 

இதை தான் தீத்து 3:9 ல் "வாக்குவாதங்களை விட்டு விலக வேண்டும்." வாக்குவாதங்களை விட்டுவிடவில்லையென்றால் அது நமது சகல நேரங்களையும் வீணாக்கிவிடும். இவர்கள் பசுமாடு வாங்க நினைத்தது நல்லது தான். ஆனால் அதில் அளவுக்கதிகமாக கற்பனை செய்து, பேச்சை வளர்த்து கணவன், மனைவி இருவரும் சண்டையிட்டு, மற்றவர் முன் வெட்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது.

 

தேவபிள்ளைகளே, நம் வீட்டில் வீணான வாக்குவாதங்களை உண்டாக்கக் கூடாது. அதுவும் மற்றவர்கள் வந்து நம்மை சமரசம் பண்ணி வைக்க கூடிய அளவிற்கு செல்லவும் கூடாது. அப்படி செய்வோமானால் தேவ நாமம் தூஷிக்கப்படும். தேவ நாமம் மகிமைப்பட வேண்டுமேயல்லாமல் தூஷிக்கப்படக் கூடாது. வாக்குவாதங்கள் நம்முடைய சமாதானத்தை கெடுத்துப்போடும். எனவே வீணான வாக்குவாதங்களை தவிர்த்து சமாதானத்தைக் காத்துக் கொள்வோம். வாங்கப்படாத பசுவிற்கான வாக்குவாதங்களை போல நம்முடைய எதிர்கால வாழ்விற்கான வாக்குவாதங்களையும் தவிர்த்து கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்துவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

- Mrs. எப்சிபா இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:-

நமது தோழமை ஊழியர்களின் ஊழியத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al