By Village Missionary Movement
Thursday, 02-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 02.10.2025
ஒரிஜினலைத் தேடி...
"உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;..." – நீதி. 28:20
ஒரு நாள் காலையில் எழுந்து ஜெபித்து, வேத வசனங்களை தியானிக்கும் போது தேவன் என்னோடு பேசினார். நீ ஒரிஜினலா இல்லை டூப்ளிக்கேட்டா? என்று! நான் இதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது தேவன் என்னிடம், நீ முதன் முதலில் இரட்சிக்கப்பட்ட போது என் மீது வைத்த அன்பினிமித்தம் நீ சந்தித்த அவமானங்கள், நிந்தைகளை பொருட்படுத்தாமல் ஊழியம் செய்ய ஓடினாய். ஆனால் இன்று உன்னை யாராவது திட்டினால் கலங்குகிறாய். முன்பு ஆத்துமாக்களை எனக்குத் தாரும் எனக் கேட்டாய். இன்று உன் தேவைகளுக்காய் பல மணி நேரம் ஜெபிக்கிறாய். நான் முன்பிருந்த ஒரிஜினல் கணேசனைத் தேடுகிறேன். நீ ஒரிஜினல் கணேசனாக என்னிடம் வா என்றார். அன்று நான் அழுது ஆண்டவரிடம் என்னை முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்.
இதே போல் தான் வேதத்திலும் கூட ஏதேன் தோட்டத்தில் தேவன் தமது சாயலின் படியும், தமது ரூபத்தின் படியும் படைத்த ஆதாமைத் தேடினார். பகலில் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகிற கர்த்தர் ஆதாமைத் தேடினார். அப்படியானால் ஆதாம் தோட்டத்தில் இல்லையோ... இல்லை, இல்லை தோட்டத்தில் தான் இருந்தார். ஆனால் தேவன் தேடியது ஒரிஜினல் ஆதாமை! கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு ஓடோடி வந்து அவரோடு உலாவுகிற ஆதாம் அங்கே இல்லை. மாறாக அவரின் சந்நிதியை விட்டு விலகி ஒளித்துக் கொண்ட பாவம் செய்த ஆதாம் தான் அங்கு இருந்தார். தேவன் ஒரிஜினலை விரும்புகிறவர் எனவே ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்? எனத் தேடினார்.
அதே போல் தேவன் நம்மை இரட்சித்த நாளில் தேவனின் வார்த்தையை, அவரது பிரசன்னத்தை நாடி, அவரை அண்டி அவரை சார்ந்து கொண்டு வாழ்ந்தோம். அவர் மேல் வைத்த அன்பினிமித்தம் நாம் எதையும் எதிர்பாராமல் அவருக்காக செயல்பட்டது தான் நம் ஒரிஜினல் குணமாக இருந்தது. அந்த ஒரிஜினலை பார்த்தே தேவன் நம்மை தெரிந்தெடுத்து, அவரது அன்பை நம் மீது அளவில்லாமல் பொழி ந்திருக்கிறார்.
பிரியமானவர்களே, தேவன் இன்றும் நம் ஒரிஜினலைத் தேடி நம் அருகில் இருக்கிறார். நாம் ஒரிஜினலாக இருக்கிறோமா? அல்லது டூப்ளிக்கேட்டாக இருக்கிறோமா? காலத்திற்கு ஏற்றாற்போல், சூழ்நிலைக்கேற்றாற்போல் நம்மை மாற்றிக்கொண்டு உலகத்திற்கு ஏற்றவிதமாய் வாழுகிறோமா என சிந்தித்து நம்மை சீர்ப்படுத்துவோம். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் உங்களோடிருந்து பயங்கரமான காரியங்களைச் செய்வார் என்பது அதிக நிச்சயம்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
நமது தோழமை ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864