By Village Missionary Movement
Wednesday, 01-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 01.10.2025
முதியோர் தின செய்தி
"நீடித்த நாட்களால்... திருப்தியாக்கி, என் இரட்சிப்பை... காண்பிப்பேன்" - சங்கீதம் 91:16
நீடித்த நாட்களாக வாழ்ந்து, திருப்தியோடு ஊழியத்தின் பாதையில் தேவ பலனை அனுபவித்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள்! வில்லியம் கேரி (73 வயது), ஹட்சன் டெய்லர் (73), ஏமி கார்மைக்கேல் (83), C.T.ஸ்டட் (70), ஐடாஸ்கடர் (90) வயது வரை வாழ்ந்தார்கள். இன்னும் பலர் நீடித்து வாழ்ந்து தேவ பணி செய்து, தங்கள் ஓட்டத்தை முடித்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகப் பிரகாரமான மனிதர்கள் கூட தங்கள் வாழ்க்கையின் இறுதிவரை ஓடி வெற்றி கண்டது உண்டு. ஓவியம் தீட்டும் மைக்கேல் ஏஞ்சலோ தனது 88 வயது வரை இப்பணியைச் செய்தார்கள். ஜார்ஜ் பர்ன்ஸ் நகைச்சுவைகளை தனது 87 வயது வரை எழுதி பிரசித்தி பெற்றார். ஆல்பர்ட் ஸ்வைட்ஷர் 89 வயது வரை ஆப்பிரிக்காவில் மருத்துவமனையை நிறுவி சேவையாற்றிக் கொண்டிருந்தார். பெர்னார்ட்ஷா தனது 93 வயது வரை நாடகத்திற்காக கதைகள் எழுதி புகழ்பெற்றார். இப்படி தங்கள் முதிர் வயது வரை தங்கள் தாலந்தை பயன்படுத்தி மரித்தவர்கள் அநேகர். "முதிர் வயதுள்ளவன் முகத்தை கனம் பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்" (லேவி.19:32) என்று கட்டளை கொடுத்துள்ளார். முதியோர் அனைவரையும் கனம் பண்ணுவது தேவ கட்டளையாக உள்ளது.
ஊழியம் செய்து ஓய்வு பெற விரும்பி வீட்டில் முடங்கி கிடக்கும் ஊழியர்களும் உண்டு. வருகையின் தூதன் ஆசிரியர் மறைந்த தேவதாஸ் அவர்கள் உயிரோடு இருக்கும்போது எனக்கு அதிக வயதாகி விட்டது, எனக்கு ஊழியத்தில் இருந்து ஓய்வு வேண்டும் என்றார். தேவன் பல வெளிப்பாடுகளை கொடுத்து கடைசி மூச்சு வரை ஊழியம் செய்ய தேவன் விரும்பியதை வெளிப்படுத்தினார். அவர் மரிக்கும் வரை ஊழியம் செய்தார். சங்கீதக்காரனைப் போல் ஜெபிக்க வேண்டும். சங்கீதம் 71:18 ல் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக என்று முதியோர் ஜெபிக்க வேண்டும். மோசேயை 120 வயதிலும், காலேப்பை 85 வயதிலும், அன்னாளை 84 வயதிலும், சிமியோனை பூரண ஆயுசிலும் கர்த்தர் பெலப்படுத்தி இரட்சண்யத்தை காணும் படி செய்தார்.
பிரியமானவர்களே! உங்கள் முதிர்வயது வரைக்கும் உங்களைத் தாங்குவேன்; நரை வயது வரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்; நான் உங்களை உண்டாக்கினேன்; நான் ஏந்துவேன்; சுமப்பேன்; தப்புவிப்பேன் என்கிறார். ஆகவே முதுமையைக் குறித்து கலங்காதீர்கள். இயலாது என்று எண்ணி முடங்கி விடாமல் தேவனுக்காக செயல்பட்டுக் கொண்டே இருங்கள். ஒருவேளை ஊழியம் செய்து ஓய்வு பெற்று விட்டீர்களா? உங்களுக்கு கிராம மிஷனெரி இயக்க வளாகத்தில் தங்கி, இளைப்பாறி தேவ பணியை உங்கள் ஆயுசு உள்ளவரை குடும்பமாக செய்ய வசதிகளை செய்து கொடுக்கிறோம். தேவன் உங்களை நடத்தின வழிகள், உருவாக்கின அனுபவங்களை இளம் ஊழியர்களுக்கு கற்றுக் கொடுக்க வாருங்கள். இந்த முதியோர் தினத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
- Rev.D. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
இந்த மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864