By Village Missionary Movement
Monday, 29-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 29.09.2025
ஆறுதலின் தேவன்
"...சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்" - 2 கொரி.1:3
என்னுடைய தகப்பனார் ஜுன் மாதம் 21 ஆம் தேதி மரித்துப் போனார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் அவருக்கு ஒரே மகள். எனக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. என் தகப்பனின் மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒரு வாரம் அழுது கொண்டே இருந்தேன். என்னால் வேதத்தைக் கூட சரியாக வாசிக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்குப் பின் எனது சொந்த ஊருக்கு சென்றேன். மறுநாள் அதிகாலை ஜெபம் முடித்த பின்பு, என் மனம் 21-6-2025 அன்றுள்ள 'மோட்சப் பயணம்' புத்தகத்தின் வசனத்தை பார் என்றது. நானும் திறந்து படித்த போது கீழ்க்கண்ட வசனம் அன்றைய தியானமாக இருந்தது. "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."
இந்த வசனத்தை வாசித்த பின் ஒரு பெரிய சமாதானம், ஆறுதல் என் உள்ளத்தை நிறைத்தது. ஆனாலும் என் ஜெப நேரத்தில் எல்லாம் என் தகப்பனை நினைத்து அழுவேன். பின்பு ஒரு நாள் ஜெப வேளையில், "தேவனே, எனக்கு நீர் கொடுத்த வசனத்தின் படி ஒரு விசை என் தகப்பனைக் காட்டும், அதன் பின் நான் அழவே மாட்டேன்" என்று கேட்டேன். சரியாக இரண்டு நாட்கள் கழித்து அதிகாலை வேளையில் ஒரு சொப்பனத்தைப் பார்த்தேன். அந்த சொப்பனத்தில் என் தகப்பனை பிரகாசமுள்ளவராக, நேர்த்தியான ஆடை அணிந்தவராகக் கண்டேன். அன்றிலிருந்து என் துக்கம் மறைந்தது, ஆறுதலடைந்தேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
புதிய ஏற்பாட்டில் அப். பவுலை நாம் அறிவோம். அவர் ஊழியத்தின் பாதையில் பலவிதமான எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து இருக்கிறார். பல இன்னல்கள், போராட்டங்கள், தனிமையான சூழ்நிலைகள், ஆறுதலற்ற நேரங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் தேவன் பவுலுக்கு ஆறுதலாக இருந்ததை குறிப்பிடுகிறார்.
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு இதை வாசிக்கின்றவர்களில் யாரேனும் உங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து துக்கத்தோடு காணப்படுகிறீர்களா? ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்குண்டு ஆறுதலின்றி தவிக்கிறீர்களோ? கலங்காதிருங்கள். ஆறுதலின் தேவன் ஆறுதலளிக்கிறவராக உங்களோடு இருக்கிறார். உங்கள் வேதனையை, துக்கத்தை அவர் அறிந்திருக்கிறார். எனக்கு ஆறுதல் அருளின தேவன் நிச்சயமாக உங்களுக்கும் ஆறுதல் செய்வார். நம்முடைய ஆண்டவருக்கு ஒரு நாமம் உண்டு. ஆறுதலின் தேவனென்று, தம்மை நம்புகிற அனைவருக்கும் ஆறுதல் அளிக்கிறவராயிருக்கிறார். அல்லேலூயா!
- C. ஜாய்ஸ்
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்திற்கு கைப் பிரதிகள் அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864