By Village Missionary Movement
Saturday, 27-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 27.09.2025
பரம ராஜ்யத்திற்கு...
"அதற்குக் கர்த்தர்... நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்" - அப். 9:15
ஏமி கார்மைக்கேல் அம்மையார், திருநெல்வேலியில் ஊழியம் செய்த தாமஸ் வாக்கரைச் சந்தித்து அவருடன் இணைந்து பணியாற்றினார். முன் நாட்களில் பெண் குழந்தைகளைக் கோவிலுக்கு விற்பனை செய்யும் வழக்கம் இருந்தது. சில குடும்பங்களில் நோய்கள், பிரச்சனைகள், போராட்டங்கள் ஏற்படும் போது குடும்பத்திலுள்ள ஒரு பெண் குழந்தையை கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்கும் பழக்கம் இருந்து வந்தது. கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், பெண் குழந்தைகளை வளர்க்க வசதியில்லாத போது கோவிலில் கொண்டுபோய் விடுவார்கள். ஏமி அம்மையார் இது போன்று பெண் பிள்ளைகளை கோவிலிலிருந்து மீட்டெடுத்து, தன்னுடைய காப்பகத்தில் வைத்து பராமரித்து அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பது போன்ற சிறந்த ஊழியத்தை நிறைவேற்றினார்கள். பின் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாளில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே தேவராஜ்யம் சேர்ந்தார்கள். இந்த அம்மையார் போன்றே ஆண்டவருக்கென்று, பரம ராஜ்யத்திற்கென்று ஏதாவது செய்ய முன்வருவோம்.
அப்போஸ்தலனாகிய பவுலை நாம் அறிவோம். பவுலைப்பற்றி வேத வல்லுநர்கள், அவர் மிகுந்த ஆஸ்தியுள்ளவர், மிகவும் அதிகமாக படித்த நபர் என்று கூறுகின்றனர். அவர் கிறிஸ்துவுக்கு எதிரானவரும் கூட! அவரை இயேசு ஒரு நாள் சந்தித்தார். பவுல் எல்லாவற்றையும் இழந்து, இலாபமான அனைத்தையும் நஷ்டமென்று கருதுவதாக கூறினார். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்றும் கூறுகிறார். இயேசு தன்னை சந்தித்த அதே நாளில் கிறிஸ்துவுக்கென்று தன்னையே அர்ப்பணித்தார். அநேகரை கிறிஸ்துவண்டையில் நடத்தினார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! பரம ராஜ்யத்தின் வேலையை செய்வதற்கு நமக்கு தகுதியோ, திறமையோ தேவையில்லை. இயேசுவின் அன்பு நம்மை உந்தி தள்ளினால் மட்டுமே போதுமானது. அப்படிப்பட்டதான அன்பு ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொருவரையும் உந்தி தள்ளிக்கொண்டேதான் இருக்கிறது. தன்னுடைய சொந்த தேசத்தை விட்டு வந்த ஏமி கார்மைக்கேல் அம்மையாரும், தன் நிலையை விட்டுக்கொடுத்த பவுலும், பரம ராஜ்யத்திற்காக பாடுபட்டனர். பரம ராஜ்யத்திற்காக செயல்படுகின்ற நபர்கள் இவ்வுலகத்தின் பார்வையில் பைத்தியமாகவும், குப்பையாகவும் கூட தோன்றலாம். ஆனால் இவர்கள் எல்லோரும் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். எனவே நாமும் இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து கர்த்தரின் பரம ராஜ்யத்தின் பணியினை செய்ய முன் வருவோம். அதற்கு கடவுளின் ஒத்தாசையை நாடுவோம்.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்திற்கு, 50 ஆயிரம் வேதாகமங்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864