By Village Missionary Movement
Friday, 26-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 26.09.2025
இயேசுவின் வாஞ்சை
"ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்" - மத்தேயு 9:38
சத்திரம் என்ற ஊரில் ஒரு தேவ ஊழியர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு வீட்டில் ஜெபக்குழு நடத்தி வந்தார். ஆண்டவரை அறியாத அந்த குடும்பத்தினர் இதன் மூலம் இயேசுவை அறிந்து கொண்டனர். ஆனால் அந்த கிராமத்திலுள்ள ஜனங்கள் எல்லோருமே இந்த ஊழியத்திற்கு எதிராக செயல்பட்டனர். தேவ ஊழியர் கிராமத்திற்குள் வரக்கூடாது என பலமுறை பிரச்சனை பண்ணினார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத விதமாக வேறு ஊழியர் ஒருவர் அந்த கிராமத்திற்குள் வர நேரிட்டது. உடனே அந்த ஊழியரை பெரும் திரளான மக்கள் கூட்டம் சூழ்ந்து அடிக்க திட்டம் தீட்டினர். இந்த காரியத்தை அறிந்தபோது ஜெபக்குழு நடத்தப்படுகின்ற வீட்டிலிருந்து ஒருவர் வந்து ஆண்டவர் தங்களுக்குச் செய்த அற்புதங்களை கூறினார். எப்படியென்றால் ஜெபக்குழு நடத்தப்பட்ட அந்த வீட்டின் தலைவிக்கு காது கேளாமல் இருந்தது. ஆண்டவரிடம் ஜெபித்த போது பூரண சுகத்தை பெற்றுக் கொண்டதோடு அந்த வீட்டின் தரித்திர நிலைமையும் மாறியது. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகுதான் இதெல்லாம் தங்களுக்கு நடந்தது என்றார். கூடியிருந்தவர்கள் ஒன்றும் பேச முடியாமல் வாயடைத்துப்போய் நின்றனர்.
வேதத்தில் புதிய ஏற்பாட்டில் அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனை அறிவோம். அந்த மனிதனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது. அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. இப்படிப்பட்ட மனிதனுக்கு இயேசு அற்புத சுகத்தைக் கொடுத்தார். அசுத்த ஆவி பிடித்த மனிதன் உடனே உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு ஜனங்கள் பயந்தார்கள். இயேசு, அவனிடம் நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தபடி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்.
இதை வாசிக்கின்றதான நேயர்களே, இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம், வாசித்தும் இருப்போம். ஆனால் ஆண்டவரைப் பற்றி அறிவிக்க, அநேக நேரங்களில் நாம் முன் வருவதே இல்லை. இன்னும் காலதாமதம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இதை படிக்கின்ற நீங்கள் இதை படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல், உங்களால் இயன்ற எதையாவது கர்த்தருடைய நாமம் மகிமைப்படவும், நிலையான நித்திய வாழ்வை பெறவும் கர்த்தர் தந்த தாலந்தை அவருக்கென்று பயன்படுத்தி தீவிரமாய் செயல்படுவோம். இது சிந்திக்கும் காலம், செயல்படும் நேரம். ஆகவே மவுனமாயிருக்க வேண்டாம். சிந்திப்பீர்! செயல்படுவீர்!
- V.P.பாக்கியமுத்து
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் நம்மோடு இணைந்து பணி செய்யும் உடன் ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864