By Village Missionary Movement
Thursday, 25-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 25.09.2025
காலத்தை அறிந்து
"...யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்து வைத்தான்;..." - ஆதி.41:49
கோடைகால வெயில் கடுமையாக பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் வெட்டுக்கிளி ஒன்று வயலில் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், கும்மாளம் போட்டுக் கொண்டும் இருந்தது. அப்போது எறும்பு ஒன்று ஒரு அரிசியை வெகு பாடுபட்டு சுமந்து சென்றதை பார்த்தது. வெட்டுக்கிளி எறும்பிடம் வா, நாம் சேர்ந்து விளையாடலாம், கதை பேசலாம் என்றது. எறும்போ நான் இப்போது வர முடியாது. மழைகாலத்தை சமாளிக்க தானியங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றது. மழைகாலமும் வந்தது வெட்டுக்கிளிக்கோ உணவு தேடி வெளியே செல்ல முடியவில்லை. பசி வயிற்றை கிள்ளியது. ஆனால் எறும்போ வயிறார உண்டு மகிழ்ச்சியோடு இருந்தது. அதைப் பார்த்த வெட்டுக்கிளி தன் முட்டாள்தனத்தை உணர்ந்தது.
யோசேப்பு அதிகாரியாக எகிப்து தேசத்தில் நியமிக்கப்படுகையில் ஏழு வருடம் பஞ்சமும், பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருடங்களில், காலத்தை அறிந்து, எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை ஜனங்களிடத்தில் வாங்கி, தானியங்களை பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். யோசேப்பு ஜனங்களிடத்தில் ஒரு பங்கை வாங்கி அளவிறந்ததாய் கடற்கரை மணலைப் போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்து வைத்தார். செழிப்புள்ள ஏழு வருடங்களில் யோசேப்பு ஞானமாய் சேர்த்து வைத்தது அளவுக்கு அடங்காததாயிருந்தது. செழிப்பின் வருடங்கள் முடிந்தபின் ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது. சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று. ஆனாலும் எகிப்து தேசமெங்கும் ஆகாரம் இருந்தது. உணவுக்காக ஜனங்கள் யோசேப்பினிடத்தில் வந்தார்கள். யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, தானியங்களை ஜனங்களுக்கு கொடுத்தான். ஜனங்கள் புசித்து, மகிழ்ச்சியாய் இருந்தார்கள். எகிப்தில் மாத்திரமல்ல, சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள். விசேஷமாக தன் சொந்த குடும்பத்தையும் போஷித்தான்.
தேவபிள்ளைகளே! நீங்களும் காலத்தை அறிந்து செயல்பட வேண்டும். அவ்வாறு ஞானமாய் காலத்தைப் பிரயோஜனப்படுத்தும்போது நீங்களும் போஷிக்கப்படுவீர்கள், உங்களை சுற்றி இருப்பவர்களையும் போஷிக்கிறவர்களாக மாறுவீர்கள். ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் வரும் என்று ஆமோஸ் 8 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். எனவே வசனம் கிடைக்கின்ற போது அதனை வாசித்து, தியானித்து இருதயமாகிய பொக்கிஷத்தில் சேர்த்து வையுங்கள். ஆமென்.
- Sis. சலோமி
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க தேவன் திறந்த வாசலை கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864