By Village Missionary Movement
Wednesday, 24-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 24.09.2025
அவிசுவாசம்
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;..." - எபிரெயர் 11:6
ஒரு ஏழைக்குடும்பம் வறுமையில் போராடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் சாப்பாட்டிற்கு ஒன்றுமில்லாமல் பட்டினியாய் தவித்தபோது, தன் பிள்ளைகளுக்கு தேவன் எலியாவை காகத்தைக் கொண்டு போஷித்த விதத்தைச் சொல்லி விசுவாசத்தை ஊட்டினார் அந்த தகப்பனார்.
அன்று இரவில் பனி அதிகமாக இருந்தபடியால் அம்மா ஜன்னல் கதவுகளை சாத்தி விட்டு பிள்ளைகளை படுக்க வைத்தார்கள். பசியோடு படுத்த ஒரு குழந்தை எழுந்து வந்து அம்மாவிடம் அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். எலியாவைக் காகத்தைக் கொண்டு போஷித்தவர் நம்மை போஷிக்க மாட்டாரா? அப்படி போஷிக்க அவர் காகத்தை அனுப்பும் போது, நம் வீட்டு ஜன்னல் மூடியிருந்தால் கர்த்தர் அனுப்பும் காகம் எப்படி நம் வீட்டிற்குள் வரும்? கர்த்தர் கொடுத்து அனுப்பும் அப்பமும், இறைச்சியையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுமே என்றாள். தன் பிள்ளையின் விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட அம்மா ஜன்னல் கதவை திறந்து வைத்தார்கள். அப்போது அங்கே வீட்டிற்கு வெளியே மழைக்காக ஒதுங்கியிருந்த ஒரு மேயர், வீட்டினுள் நடந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டே இருந்தார். உள்ளம் உருகிப்போன அவர் உடனே ஓடி போய் நிறைய உணவுப்பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு வந்து ஜன்னல் வழியாகப் போட்டு விட்டு சென்றார். தொப் என்கிற சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடிப்போய் அங்கே இருந்த உணவுப் பார்சலை எடுத்து சாப்பிட்டார்கள். வயிறார சாப்பிட்ட அவர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள்.
விசுவாசிகளின் பட்டியலிலே இடம் பெற்ற ஏனோக்கு என்ற தேவ மனிதரை நாம் அறிவோம். அவர் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த போதே மரணத்தை காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஏனோக்கு தேவனுக்கு பிரியமானவனென்று, அவர் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றார். தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறாரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
எனக்கு பிரியமான தேவஜனமே! நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசமில்லாமல் இருப்பது தேவனுக்குப் பிரியமில்லாத காரியம். இப்படி விசுவாசத்தைக் குறித்து அநேக வசனங்களை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நாம் விசுவாசத்தில் வளர வேண்டுமானால் அவிசுவாசத்தை அறவே விட்டு விட வேண்டும். "விசுவாசம்" என்னும் ஜன்னலை திறந்து வைக்க பழகிக்கொள்ளுங்கள். கர்த்தர் நம்முடன் இடைப்பட, அவருடைய கரம் நம் வாழ்வில் செயல்பட நம்மை அவருடைய கரத்தில் ஒப்படைப்போம். விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய அவரை நோக்கி நமக்கு நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
- D. சுதா தேவபாஸ்கர்
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களில் ஒரு கோடி ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864